https://gumlet.assettype.com/vikatan/2020-06/0e9589a4-e749-4a86-b353-32f33767b95b/vikatan_2020_01_7561ff19_5983_4e5f_bdbc_c6cf2ab3af90_98top.jpg`ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்!’ - சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை

பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு இன்று (31.8.20) ஒரு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைப்பார்த்த சசிகலா அதிர்ந்துபோய்விட்டாராம். அடுத்த வருடம் பிப்ரவரியில் சிறை தண்டனை முடிந்து வெளியே வரவேண்டும். சிறை நன்னடத்தை விதிகளின் கீழ் தண்டனைக் கால சலுகை, நீதிமன்றம் அறிவித்த அபதாரத் தொகை செலுத்தவேண்டிய பாக்கி என்றெல்லாம் சம்பிரதாயங்கள் ஒருபுறம் இருக்க, சீக்கிரமே வெளியே வந்துவிடுவார் என்று சசிகலா தரப்பினர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு பா.ஜ.க மேலிடம் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, அப்படித் எண்ணத் தோன்றவில்லை.

காரணம், தமிழகத்தின் நடந்த, நடக்க இருக்கும் ரெய்டுகள் அனைத்தையும் வருமான வரித் துறையின் டைரக்டர் ஜெனரல் (விசாரணை) அலுவலக அதிகாரிகள்தான் நடத்துவார்கள். இதற்கான அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்குகிறது. தற்போது டைரக்டர் ஜெனரலாக இருப்பவர், அடுத்த சில நாள்களில், பதவி உயர்வு பெற்று மாறுதல் ஆகப்போகிறார். அதற்கு முன்பு, கடந்த 28-ம் தேதியன்று சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பான விவரங்களை தொகுத்து, அவை முடக்கபட்டுள்ளதாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். அந்த சொத்துக்கள் உள்ள குறிப்பிட்ட பகுதி பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்கங்களுக்கும் நோட்டீஸ் போயிருக்கிறது.

சசிகலா

சம்மந்தப்பட்ட பினாமி கம்பெனிகளின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதேபோல், பினாமி சொத்துக்கள் தொடர்பாக சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டபோது,`தனக்கும் அந்த சொத்துகளுக்கும் தொடர்பில்லை' என்று சொல்லிவிட்டார். இந்த நிலையில், இரண்டாவது முறையாகத் தற்போது வேறு சில சொத்துக்களை சுட்டிக்காட்டி என்று நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள. இதேபோல், மேலும் அடுத்தடுத்து பினாமி சொத்துக்களை சுட்டிக்காட்டி சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்ப இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

திடீரென ஏன் இந்த நோட்டீஸ்? அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததா? என்று அ.தி.மு.க. பிரமுகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதுபற்றி பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

Also Read: `சசிகலா ரீ-என்ட்ரி’, தினகரனுக்கு பா.ஜ.க-வின் `ஸ்கெட்ச்..!’ - டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்

``சசிகலா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டபோது, நிறைய ஆவணங்களை கைப்பற்றியிருக்கிறார்கள். அவையாவும், பினாமி பெயரில் சசிகலா வாங்கியதாக வருமானவரித்துறையினர் குற்றம்சாட்டுகிறார்கள். வருமான வரித்துறையின் பினாமி தடுப்புப் பிரிவு சட்டத்தின் கீழ் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக சசிகலாவுக்கும் பினாமி பிரமுர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். அந்த சொத்துக்கள் உள்ள ஏரியாவில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கும் அதே நோட்டீஸ் வந்துள்ளது. உதாரணத்துக்கு, சென்னை, சென்னை புறநகரில் சொத்துக்களை 'ஸ்ரீ ' என்று தொடங்கும் பினாமி கம்பெனியைச் சேர்ந்த இரண்டு பிரமுகர்கள் பெயரில் வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சசிகலாவின் உறவினர்கள். குறிப்பிட்ட கம்பெனிக்கு பெரிய பிஸினஸும் கிடையாது.

சசிகலா

அந்த நிறுவனம் பேனரில் வாங்கப்பட்ட 200 கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை இப்போது வருமான வரித் துறையினர் முடக்கியுள்ளனர். போயஸ்கார்டனில் ஜெயலலிதா வீட்டுக்கு அருகே பிரபல கம்பெனி ஒன்றுக்குச் சொந்தமான 10 கிரவுண்ட் நிலத்தையும் எப்படியோ வாங்கியிருக்கிறார்கள். தாம்பரம், ஆலந்தூர், கூடுவாஞ்சேரி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஏரியாக்களில் உள்ள இடங்களை வருமான வரித் துறையினர் முடக்கியிருக்கிறார்கள்.

அதேபோலவே, 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு காலகட்டத்தில் ஒன்பது இடங்களை சுமார் 1,600 கோடி ரூபாய் அளவுக்கு வாங்கியிருக்கிறார்கள். பெரம்பூரில் பிரபல சினிமா தியேட்டர், கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பிரபல ரிசார்ட் உள்ளிட்ட ஒன்பது சொத்துக்கள் இருப்பதையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், இதுதொடர்பாக, சசிகலா தரப்பில் மேல்முறையீடுக்கு போயிருக்கிறார்கள். இருந்தாலும், அந்த சொத்துக்களை தற்போது முடக்கியிருக்கிறார்கள். பத்திரப் பதிவுத் துறையினர் யாராவது இதற்கு உடந்தையாக இருந்தார்களா என்கிற ரீதியிலும் விசாரித்து வருகிறார்கள் '' என்றார்கள்.

சசிகலா தரப்பில் அவரது ஆதரவு பிரமுகர்களிடம் பேசியபோது, ``இதெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள். அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். சசிகலா நிரபராதி என்பதை சட்டத்தின் முன் நிருபிப்பார் '' எனபதோடு முடித்துக் கொண்டார்கள்.



from Latest News https://ift.tt/34QbnDU

Post a Comment

0 Comments