https://gumlet.assettype.com/vikatan/2020-12/cb1f0a27-2db0-4171-a1fe-33f40ba995e0/rajini.jpg``நான் செய்த ஒரே குற்றம்’ ; போகிறேன், வரமாட்டேன்!’ - தமிழருவி மணியன் உருக்கம்

ரஜினி, தனது கட்சி தொடர்பாக வரும் 31-ம் தேதி அறிவிப்பை வெளியிடுவேன் என கூறியிருந்த நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பின் போது, அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினி கடந்த 25-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து 27-ம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர், தனி விமானம் மூலம் உடனடியாக அவர் சென்னை திரும்பினார். டிசம்பர் 31-ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பு என்று கூறியிருந்தநிலையில், ஒரு வாரம் அவருக்கு முழுமையாக ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

ரஜினிகாந்த்

இந்தநிலையில்தான், கட்சி தொடங்கி அரசியலுக்கு வரவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதாக ரஜினி தெரிவித்தார். ரஜினியின் அறிவிப்பு தமிழக அரசியலில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. முன்னதாக அரசியல் கட்சி தொடங்குவேன் என அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழருவி மணியனை மேற்பார்வையாளராக நியமித்திருந்தார். தற்போது ரஜினிகாந்தை தொடர்ந்து தமிழருவி மணியனும் அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளார்.

Also Read: `என்னை எந்த மிரட்டலும் பணியவைக்க முடியாது’ , `இந்திய அரசியலமைப்பை மாற்றணும்’ - ரஜினிகாந்த்

இது தொடர்பாக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர், தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``என் கல்லூரிப் பருவத்தில் நான் காமராஜர் காலடியில் என் அரசியல் வாழ்வை தொடங்கினேன். 50 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பளுக்கற்றது. இரண்டு திராவிட கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொதுவாழ்க்கை பண்புகளும் பாழடைந்துவிட்டன. அரசியல் ஊழல் மலிந்த சாக்கடையாக சரிந்து விட்டது.

அர்ஜுனமூர்த்தி, ரஜினிகாந்த், தமிழருவி மணியன்

சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம் தேடும் மலினமான பிழைப்புவாதிகளின் புகலிடமாக அரசியல் களம் மாறிவிட்டது. இங்கே நேர்மைக்கும் உண்மைக்கும் ஒழுக்கத்திற்கும் எள்ளளவும் மதிப்பில்லை. நான் ஒருபோதும் அதற்குப் புறம்பாக வாழ்ந்ததில்லை, எவரிடத்தும் எந்த நிலையிலும் கையேந்தியதில்லை.

இன்று என் வாழ்க்கை ஒரு சாதாரண வாடகை வீட்டில்தான் நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் நலன் சார்ந்த ஒரு மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும், மீண்டும் காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்க வேண்டும் என்று என் கனவை நனவாக்க தொடர்ந்து முயன்றதுதான் நான் செய்த ஒரே குற்றம்.

இதற்காக மலினமான மனநோயாளிகளின் தரம் தாழ்ந்த விமர்சனக் கணைகள் என் மீது வீசப்படுவது என் மனைவி மக்களின் மனங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டன.

மாணிக்கத்திற்கும் கூழாங்கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மையும் தூய்மையும் வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத அரசியல் களத்தில் இருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது. எந்த கைமாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோர்த்து காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடைபெற்றுக் கொள்கிறேன். இழப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்க மாட்டேன்.

தி.மு.க-வில் இருந்து விலகும் போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார்; நான் போகிறேன், வரமாட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read: `ரஜினி அரசியலுக்கு வராதது தமிழக மக்களுக்குத்தான் இழப்பு!’ - போயஸ் கார்டனில் ரசிகர் நெகிழ்ச்சி



from Latest News https://ift.tt/2WUvknN

Post a Comment

0 Comments