https://gumlet.assettype.com/vikatan/2021-03/9f84408e-a738-49d3-ba6b-1bd603f25a42/IMG_20210331_WA0038.jpgபைக் பேரணி, வெறுக்கத்தக்க கோஷம், கல் வீச்சு - யோகி ஆதித்யநாத் கோவை வருகை ரிப்போர்ட்!

தேர்தல் பரப்புரைக்காக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கோவை வந்திருந்தார். இதற்காக தனி விமானம் மூலம் லக்னோவில் இருந்து கோவை விமான நிலையம் வந்த யோகி, புலியகுளம் பகுதியில் பா.ஜ.க இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைக்க வந்தார். அப்போது, புலியகுளம் விநாயகர் கோயிலில் யோகி ஆதித்யநாத் சாமி தரிசனம் செய்தார்.

யோகி ஆதித்யநாத்

இதையடுத்து பேரணியை தொடங்கி வைத்து யோகி மற்றும் வானதி அங்கிருந்து ராஜவீதி வரை செல்ல ஒரு வாகனத்தை பிரத்யேகமாக தயார் செய்திருந்தனர். ஆனால், யோகி ஆதித்யநாத் அந்த வாகனத்தில் ஏற மறுத்துவிட்டார்.

Also Read: உ.பி : `கடந்த 6 ஆண்டுகளாக மோடி விவசாயிகளுக்காகப் பாடுபட்டுவருகிறார்’ - யோகி ஆதித்யநாத்

``வாகனத்தில் ஏறி கை மட்டுமாவது அசையுங்கள்” என வானதி கேட்டுக் கொண்டார். சற்று யோசித்துவிட்டு யோகி வாகனத்தில் ஏறி கையசைத்துவிட்டு, காரில் ஏறி பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு சென்றுவிட்டார். ஆனால், யோகி மேடை ஏறிய போது அங்கு பெரிய அளவுக்கு கூட்டம் சேரவில்லை.

பேரணி
யோகி ஆதித்யநாத்

வெயிலும் கடுமையாக வாட்டிக் கொண்டிருந்ததால் அங்கு இருந்த சிலரும் நிழலில்தான் நின்று கொண்டிருந்தனர். இதனால் மேடையில் இருந்தவர்கள், ``நிறைய இடம் காலியா இருக்கு. தயவு செஞ்சு முன்னாடி வந்து உட்க்காருங்க. வெயிலை எல்லாம் பார்க்காதீங்க. அப்பறம் நம்ம ஜெயிக்கவே முடியாது” என்று கெஞ்சாதகுறையாக கூறினர்.

சிறிது நேரம் கழித்து பேரணியில் இருந்தவர்கள் வந்த பிறகுதான் ஓரளவுக்கு கூட்டம் கூடியது. அதிலும் வட இந்தியர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தது. மேடை ஏறிய பிறகு, வானதி சீனிவாசன் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். மேடையின் முன் பகுதியில் இருந்த ஆர்ச்சில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் எஸ்.பி வேலுமணி, வானதி சீனிவாசன் படங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.

பொதுக்கூட்ட மேடை
வானதி, யோகி ஆதித்யநாத்

பிரதமர் மோடியின் படம் மிஸ்ஸிங். மேடையில் ஒரு ஓரமாகத்தான் மோடி படம் இடம் பெற்றிருந்தது. ஏ.பி. முருகானந்தம் மொழி பெயர்க்க, கடைசியாக மைக் பிடித்தார் யோகி ஆதித்யநாத்.

வழக்கம் போல், ``தி.மு.க - காங்கிரஸ் கட்சியினர் பெண்களுக்கு எதிரானவர்கள். அயோத்தி ராமர் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து ரூ.120 கோடி நிதி வந்திருக்கிறது. மோடியின் பார்வை தமிழகத்தில்தான் இருக்கிறது. இந்தியாவில் கொரோனா நோய் முறியடிக்கப்பட்டு அதன் தாக்கம் குறைக்கப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத் கூட்டம்

வானதி சீனிவாசனை தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்” என்று பேசினார். தனது பேச்சில் 2 இடங்களில் வேலுமணியின் பெயரை குறிப்பிட்டு அவருக்காகவும் யோகி பிரசாரம் செய்தார்.

யோகி ஆதித்யநாத் வருகைக்காக கோவை மாநகரின் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனால், பொது மக்கள் சிரமப்பட்டனர். பா.ஜ.க இருசக்கர வாகன பேரணியின் போது, டவுன்ஹால் பகுதியில் சில அசம்பாவிதிங்கள் நடைபெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது. அதன்படி, சிலர் அங்குள்ள மசூதி அருகே வெறுக்கத்தக்க வகையில் கோஷங்கள் எழுப்பியதாகவும்,

பேரணி தகராறு

அங்கிருந்த கடைகளை மூடச்சொல்லி தகராறு செய்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக, நாம்தமிழர் கட்சியின் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வஹாப், வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகாரளித்துள்ளார்

நாம் தமிழர் புகார்
நாம் தமிழர் புகார்

இந்நிலையில், அனுமதியின்றி இரு சக்கர பேரணியில் ஈடுபட்டதற்கும், அங்கிருந்த கடை மீது கல் வீசியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.



from Latest News https://ift.tt/31B14kg

Post a Comment

0 Comments