https://ift.tt/2R99tcA புதுக்கோட்டை: கல்லூரி மாணவி கொலை; நகைக்காக அண்ணனே தங்கையைக் கொன்றது அம்பலம்!

புதுக்கோட்டை பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சிவகாமி மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது ஒரே மகள் லோகப்பிரியா(21) எம்.காம் படித்து வந்தார். பழனியப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிடவே, சிவகாமி தான் குடும்பத்தை நடத்தி வந்தார். வழக்கம் போல் சிவகாமி அன்று பணி முடிந்து இரவு வீட்டுக்கு வந்திருக்கிறார். மகளின் அறைக்குச் சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. தனது மகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்துக் கதறி அழுதார்.

சிவகாமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் கணேஷ் நகர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். லோகப்பிரியாவின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் நகைக்காக லோகப்பிரியாவைக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், லோகாப்பிரியாவின் பெரியப்பா மகன் சுரேஷ் என்பவரே நகைக்காக லோகப்பிரியாவை கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லோகப்பிரியா

போலீஸார் விசாரணையில், ``வேலை ஏதுவுமின்றி சுற்றித்திரிந்த சுரேஷ், தனது சித்தியான சிவகாமியிடம் அவ்வப்போது பணம் கேட்டு தொல்லை கொடுப்பாராம். சுரேஷின் தொல்லை தாங்காமல் சில நேரங்களில் சிவகாமி பணம் கொடுத்துவிடுவாராம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சிவகாமியிடம் ஒரு பெரிய தொகை கேட்டுத் தொடர்ந்து வலியுறுத்தவே, என்னிடம் பணமில்லை என்று கூறி சிவகாமி கொடுக்க மறுத்துவிட்டாராம். ஆனாலும் நேரிலும், போனிலும் பணம் கேட்டுத் தொடர்ந்து தொல்லை கொடுத்திருக்கிறார்.

இதற்கிடையே தான், சம்பவத்தன்று சிவகாமியின் வீட்டுக்குச் சென்றவர் அங்கு டிவி பார்த்துக் கொண்டிருந்த தங்கையான லோகப்பிரியாவிடம் பணம் கேட்டிருக்கிறார். உடனே லோகப்பிரியா அம்மாவிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று கூறியவர் போனில் சிவகாமியைத் தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்.``அவனுக்கு வேற வேலை இல்லை. நீ பணம் ஏதும் கொடுக்காதே" என்று மகளைக் கண்டித்ததோடு, அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்பு என்று கூறி வைத்துவிட்டார்.

இதனைக் கேட்டு வெளியே சென்ற சுரேஷ், திடீரென வேகமாக மீண்டும் வீட்டுக்குள் நுழைந்த பீரோவின் கதவை உடைத்து பணம், நகைகளை எடுக்க முயன்றுள்ளார். அப்போது, லோகப்பிரியா ஓடிவந்து தடுத்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் லோகப்பிரியாவைத் துடிதுடிக்கக் கொலை செய்திருக்கிறார். தொடர்ந்து பீரோவிலிருந்த நகைகள், பணத்தைச் சுருட்டியதோடு, லோகப்பிரியா அணிந்திருந்த நகைகளையும் அறுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடி தலைமறைவாகியுள்ளார். தற்போது சுரேஷை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். நகைக்காக, சொந்த சித்தி மகளையே அண்ணன் கொலை செய்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



from Latest News https://ift.tt/3e1kaH7

Post a Comment

0 Comments