https://gumlet.assettype.com/vikatan/2021-05/87e195a8-3543-4c9b-80fa-577c10b1c49d/FBC_1.pngமும்பை: ஃபேஸ்புக் மூலம் அறிமுகம்.. பெண்ணிடம் ரூ.1.7 கோடியை பறிகொடுத்த 82 வயது முதியவர்!

சமீப காலமாக நாட்டில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துவிட்டது. அதோடு சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாடுடன் இருப்பவர்களிடமும் திட்டமிட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர் சிலர். இது போன்ற மோசடி பேர்வழிகளிடம் முதியோர்கள் அதிக அளவில் ஏமாறுகின்றனர். சில நேரங்களில் படித்தவர்களே இது போன்ற கும்பல்களிடம் சிக்கிக்கொள்கின்றனர்.

மும்பை மலபார் ஹில் பகுதியை சேர்ந்த சாந்தாராம் பட்டேல்(82). மருந்து வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் லண்டனை சேர்ந்த சமந்தா மேத்யூ என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. ஃபேஸ்புக் மூலம் அவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது. அப்பெண் தன்னை இங்கிலாந்தை சேர்ந்த மருந்து கம்பெனி ஒன்றின் பொருட்கள் கொள்முதல் அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார். இருவரும் போன் நம்பர்களை மாற்றிக்கொண்டனர். அவர்கள் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்பெண் தங்களது மருந்து கம்பெனிக்கு புற்றுநோய் மருந்து தயாரிக்க தேவையான மூலிகைகளை நாகலாந்தில் உள்ள ஒரு கம்பெனியில் இருந்து வாங்குவதாக தெரிவித்தார். அதனை உங்களிடமிருந்து வாங்குவதாக சமந்தா ஆசை வார்த்தை கூறினார். நாகலாந்து கம்பெனியில் இருந்து மூலிகை பொருட்களை வாங்கி எங்களுக்கு சப்ளை செய்யுங்கள் என்று அப்பெண் தெரிவித்தார்.

சித்தரிப்பு படம்

இதையடுத்து சமந்தாவின் கம்பெனிக்கும் சாந்தாராமிற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. சமந்தாவின் கம்பெனிக்கு தேவையான மூலிகை பொருட்களை சப்ளை செய்ய தேவையான பணியில் சாந்தாராம் ஈடுபட்டார். ஒரு பாக்கெட் ரூ.2 லட்சம் வீதம் ஆரம்பத்தில் 5 பாக்கெட்களை சாம்பிளாக அனுப்புவதாக தெரிவித்தார் சாந்தாராம். ஆனால் சமந்தாவின் கம்பெனியோ குறைந்தது 500 பாக்கெட் வேண்டும் என்று தெரிவித்தது. இதையடுத்து சாந்தாராம் நாகாலாந்து கம்பெனியிடம் ரூ.1.7 கோடி கொடுத்து 500 பாக்கெட் கொள்முதல் செய்தார். அதனை இங்கிலாந்து கம்பெனிக்கு டெலிவரி செய்ய முயன்றார். ஆனால் இங்கிலாந்து கம்பெனி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை தொடர்ந்து அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சாந்தாரம் மும்பையில் உள்ள கொலாபா போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர். இந்த மோசடியில் இந்தியாவை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருக்கும் என்று கருதும் போலீஸார் அது பற்றியும் விசாரித்து வருகின்றனர்.



from Latest News https://ift.tt/3uBq6vJ

Post a Comment

0 Comments