https://gumlet.assettype.com/vikatan/2021-09/ab8af02e-3530-4654-85a5-73fa2e5a0f9f/E_8zZz5UYAQewcF.jfifகோயில் நகைகள் உருக்கப்படுவது கொள்ளைச் செயலா? - ஹெச்.ராஜா சாடலும் உண்மை நிலவரமும்

சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை அந்த துறையின் அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``காணாமல் போன சிலைகள் மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கோயில் நிலங்களை மீட்பதில் அறநிலையத்துறை வேகம் காட்டி வருகிறது. மானியக்கோரிக்கையில் மட்டும் 112 அறிவிப்புகளை வெளியிட்டுளோம். அதில் முக்கியமான ஐந்து அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்துள்ளன. முக்கியமாக, கோயில்களில் மொட்டை போட கட்டணம் கிடையாது என்ற அறிவிப்பு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கோயில்களில் உள்ள பயன்படுத்தாத நகைகளை முறையாக பயன்பாட்டுக்கு கொண்டுவரவுள்ளோம்" என்றார்.

அமைச்சர் சேகர் பாபு

மேலும், `` இதற்காக, மதுரை மண்டலத்திற்கு நீதிபதி ஆர்.மாலா, திருச்சி மண்டலத்துக்கு நீதிபதி ரவிசந்திரபாபு, சென்னை மண்டலத்துக்கு நீதிபதி ராஜீ ஆகியோர் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்படும். இந்த குழுவின் மூலம், கோயில்களில் பயன்படுத்தாமல் உள்ள நகைகளை மீட்டு அவை உருக்கப்படும். இந்த உருக்கும் பணி மத்திய அரசின் உருக்காலைகளில் உருக்கப்பட்டு தங்கக்கட்டிகளாக மாற்றப்படும். இதனை வைப்பு நிதியில் வைத்து வருமானம் ஈட்டவுள்ளோம். அதில் வரும் வட்டித்தொகைகளை கோயில் திருப்பணிகளில் பயன்படுத்தவுள்ளோம். இது கோயில்களின் வருமானத்தை அதிகரிக்க உதவும். இந்த நகைகள் பயன்படுத்தாமல் உள்ளது. இதனை முறையாக பயன்படுத்தவுள்ளோம்" என்று கூறினார். இந்த அறிவிப்புக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரையில் உள்ள பாஜக அலுவலகத்தில் தீனதயாள் உபத்யாயா பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``அறநிலையத்துறைக்கு உயர்நிதிமன்றம் 75 கட்டளைகளை கொடுத்துள்ளது. அதையெல்லாம் கவலைப்படாது, அறநிலையத்துறை அமைச்சர் உதயநிதியின் பின்னால் கூட்டங்களுக்கு சென்றுகொண்டிருக்கிறார். சமீபத்தில் மதுரையில், இந்து சமய அறநிலையத்துறை என்பதில் இந்து சமயத்தை எடுத்துவிட்டு அறநிலையத் துறை என்று போஸ்டர் அடுத்துள்ளனர் என்று எனக்குத் தகவல் வந்துள்ளது. இந்த துறை இந்து மதத்தை அளிப்பதற்காக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எனக்கு வந்த தகவல் உண்மை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின்மீது அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். முதலமைச்சர் இந்த அமைச்சரை `செயல்' பாபு என்று அழைக்கிறார். இவர் செயல் பாபுவும் கிடையாது, சேகர் பாபு கிடையாது சினேக் பாபு என்று சொல்கிறேன். மானியக்கோரிக்கைகளில் இவர் அறிவித்த அறிவிப்புகள் அனைத்துமே இவரின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது" என்றார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஹெச்.ராஜா

மேலும், கோயில் நகைகள் எல்லாவற்றையும் உருக்க போகிறாராம் அமைச்சர். அந்த நகைகளில் இருக்கும் வைரம் வைடூரியம் போன்ற கற்களை எல்லாம் என்ன செய்ய போகிறீர்கள். அதையெல்லாம் கொள்ளை அடிப்பதற்கா? திராவிட இயக்கத்தவர்களினால் இந்து கோயில் சொத்துக்கள் சூறையாடப்படுகிறது. எந்த சட்டத்தின் கீழ் கோயில் நகைகளை உருக்கப்போவதாக அறிவித்துள்ளார்கள். அமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறதா? இந்த தங்கநகை விவகாரத்தில் நானே நீதிமன்றத்திற்கு செல்வேன். எந்த கோயிலிலும் காணிக்கையாக வழங்கப்படும் தங்க நகை குறித்து பதிவேடுகளில் பதிவு செய்வது கிடையாது. உண்டியலில் காணிக்கையாக போடப்படும் தங்க நகைகள் எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளதா? எத்தனை கோயில்களில் எழுதப்படுகிறது. கோயில் நகைகளில் எவ்வளவு கொள்ளை அடிப்பீர்கள். சிலை திருட்டுக்கு அறநிலையத் துறை தான் காரணம். ஈ.வெ.ரா உருவாக்கிவிட்ட முட்டாள்கள் கேட்கிறார்கள். பூசாரிக்குத் தெரியாமல் சிலை காணாமல் போகுமா என்று? பூசாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மூலவர் சிலை எங்கும் திருடப்படவில்லை. அறநிலையத் துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிலைகள் தான் திருடு போயுள்ளது" என்றார்.

மேலும், ``சுதந்திர தினத்தன்று பணிநியமன ஆணையை வழங்கியுள்ளார் அமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறதா? முதல்வருக்கு அதிகாரம் இருக்கிறதா? அது சட்டவிரோதம். கோயிலில் பூசாரிகளை நியமனம் செய்வதற்கு கோயில் நிர்வாகிகளுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. சட்டத்தை மீறியுள்ளார்கள் திமுகவினர். சட்டம் தெரியாதவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். தெளிவாக செயல்படாத கோயில்களை அளிப்பதற்காக கோயில்களை கையகப்படுத்துகின்ற இந்து விரோத அரசாங்கம் இது. திருவண்ணாமலையில் இன்னும் பல கோயில்களையே மீட்டெடுக்கவில்லை. இதில் நிலங்களை மீட்டெடுத்துவிட்டேன் என்று யாரை ஏமாற்றுகிறீகள். இந்து மக்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுகிறேன். நமது பகுதியில் இருக்கும் கோயில்களுக்கு நாமளே ஒரு குழுவை அமைப்போம். அந்த கோயிலின் சொத்துக்களை பட்டியலிடுவோம். கோயில் சொத்துக்களை யாரெல்லாம் வைத்திருக்கிறார்களோ, அவர்களின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தோடு நாசமா போக என்று மண்ணை வாரி துத்துவோம். வேறு வழி தெரியவில்லை எங்களுக்கு. ஏனென்றால் அமைச்சரே பொய் சொல்லுகிறார்" என்று கூறினார்.

கோயில் ஆய்வு பணியில் அமைச்சர் சேகர் பாபு

தொடர்ந்து பேசியவர், `` நான் சட்ட வல்லுனர்களோடு கலந்தாலோசனை செய்து வழக்கு தொடருவேன். போராட்டம் நடக்கும். இனி எனது முழு நேரமும் இந்து கோயில்களை மீட்டெடுப்பதில் செலவு செய்வது என்று முடிவு செய்துள்ளேன். இதுவரை அரசு எடுத்துள்ள கோயில்களையே இவர்களால் ஒழுங்காக பராமரிக்க முடியவில்லை. இந்நிலையில் புதிய கோயில்களில் அரசு கை வைக்க கூடாது. இந்து கோயில்களை தொடுவதைப்போல சர்ச்சுகளையும், மசூதிகளையும் தொடுவார்களா? இந்துக்கள் என்றால் என்ன இளக்காரமா? அவர்களின் கோயிலை எடுத்து அழிப்பீர்களா? முஸ்லிம் படையெடுப்பில் அழிக்கப்பட்ட கோயில்களை காட்டிலும் இந்த நாத்திக இந்து விரோத திராவிட ஆட்சியில் அழிக்கப்பட்டுள்ள கோயில்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களை விட மோசமானவர்கள் இவர்கள். வெள்ளி கிழமை மசூதிகளையும், ஞாயிறுகளில் சர்ச்சுகளுக்கும் முடிவதற்கு துணிச்சல் உள்ளதா, வாக்கு உள்ளதா. வெள்ளி, சனி ஞாயிறுகளில் கோயில்களை மூடிவிட்டு அந்த நாட்களில் இந்துக்களை மசூதிக்கும், சர்ச்சுகளுக்கும் விரட்டுவதற்கான தீய செயல் இது" என்று காட்டமாக பேசினார்.

Also Read: ``இறைவன் சொத்து இறைவனுக்கே; கோயில் நிலத்துக்குப் பட்டா வழங்க முடியாது!''- அமைச்சர் சேகர் பாபு

பல்வேறு சர்சைகள் எழுந்த நிலையில், கோயில் நகைகளை உருகுவது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்திருந்தார். ``கோயில்களில் பக்தர்கள் நன்கொடையாக கொடுத்த பல்வேறு ஆபரணங்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த நகைகளில் தெய்வங்களுக்கு நேரடியாக பயன்படுத்தப்படும் நகைகளை பயன்படுத்தவும். பயன்படுத்த முடியாத நகைகளை உருக்கித் தங்கக் கட்டிகளாக மாற்றி பயன்படுத்தவுள்ளோம். அந்த வாய்ப்பு தொகை கோயிலின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படும். கோயில்களில் பயன்படாமல் உள்ள எதுவும் தெய்வத்திற்கு பயன்படும் என்றல் எந்த விமர்சனத்தையும் சந்திக்க தயார். நகைகளை உருக்கும் நடவடிக்கைகளில் எந்த வித லாப நோக்கமும் இல்லாமல் நேர்மையாகவும், உண்மையாகவும், தூய்மையாகவும் அரசு செய்யப்படும்" என்று கூறினார்.

நாராயணன் திருப்பதி

இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசியபோது, ``அறநிலையத்துறை பணி என்பது கோயில்களினுடைய நிர்வாகத்தை கவனிப்பது மட்டும்தான். அந்த நகைகளை கோயில்களுக்கு காணிக்கையாக கொடுத்தது பொதுமக்கள். கோயில் நகைகளை உருக்கி அதனை முதலீடு செய்தி அதன்மூலம் பணமாக்கி செலவிடுவது என்பது தவறானது. இது அறநிலையத்துறையின் அறமற்ற மற்றும் முறையற்ற செயல். பக்தர் ஒருவர் ஒரு கோயிலுக்கு காணிக்கை செலுத்துகிறார் என்றால், அந்த காணிக்கை அந்த கோயிலுக்கு மட்டும் தான். நிதி மேலாண்மை, அந்த கோயில்களின் வரவு, செலவு என்பது அந்த கோயில்களுக்கு உட்பட்டது. கோயில் நகைகளை என்ன செய்வது என்று அந்த கோயில் தான் முடிவு செய்யவேண்டும். இது அறநிலையத்துறையின் பணியே கிடையாது. அறநிலையத்துறையின் வேலையைத் தாண்டி இவர்கள் இப்படி செய்வது மிகவும் தவறு" என்று கூறினார்.

இது தொடர்பாக ஆன்மிக திருப்பணிகள் சார்ந்து இயங்கும் ஒருவரிடம் பேசினோம். ``கோயில் நகைகளை உருக்கும் விவகாரத்தில் அரசு ஒரு தெளிவான விளக்கத்தை மக்களுக்கு வழங்கவேண்டும். அப்போதுதான் என்ன நடக்கப் போகிறது என்பது பொதுமக்களிடத்திலும், பக்தர்களிடத்திலும் தெளிவாகும். அதுமட்டுமில்லாது, இந்த நகைகளைக் கோயில்களிலிருந்து உருக்க அனுப்பும்போது, வழக்கமாகக் கோயில்களில் யாருக்கும் தெரியாமல் நடைபெறும் ஆய்வுகள் போல இல்லாமல், உயர் அதிகாரிகள், பொதுமக்கள், பக்தர்கள் முன்னிலையில் நடத்தவேண்டும். அப்போது தான் மக்களுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும்.அந்த கோயிலில் உள்ள தொன்மையான நகைகளை அரசு பாதுகாக்கும் என்ற உறுதியையும் மக்களுக்கு வழங்கவேண்டும்" என்றார்.

தஞ்சை பெரிய கோவில்

மேலும், `` கோயில் நகைகளை உருக்கி அந்த கோயில்களுக்கே தங்க, வெள்ளி ஆபரணங்களாக மாற்றி அதைச் சாமிக்குப் பயன்படுத்த முடியும் என்றால் அதைச் செய்யலாம். தவிர, அந்த நகைகளை வைப்பு நிதியாக வைத்து வரும் வருமானத்தில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளில் அரசின் பெயர் இடம்பெறாமல், அந்த கோயில்களின் பெயர் இடம்பெற வேண்டும். உதாரணத்திற்குத் திருச்செந்தூர் முருகன் கோயில் நகைகளின் மூலம் வரும் வருமானத்தில் அந்த பகுதியில் ஒரு கட்டிடமோ ஒரு மேம்பட்டு பணியோ மேற்கொள்ளப்பட்டால் அதில் அரசின் பெயரோ அல்லது கட்சியின் பெயரோ வராது. திருச்செந்தூர் முருகனின் பெயர் தான் இடம்பெறவேண்டும். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் நகைகளைத் திருட அதிக வாய்ப்புள்ளது. எனவே அரசு மிக வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும். இதில் ஏதேனும் தவறு நடந்தால் அது அரசைத் தான் மிகவும் பாதிக்கும் என்பதை அவர்கள் உணரவேண்டும்" என்று கூறினார்.



from Latest News https://ift.tt/3olLPYW

Post a Comment

0 Comments