https://gumlet.assettype.com/vikatan/2021-08/2d53ea2b-0766-4664-85d2-dcab3c4f9b39/stalin.jpg`ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்; விரைவில் அரசாணை!' - முதல்வர் ஸ்டாலின்

மாநிலத்துக்கு 'தமிழ்நாடு' என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட திமுக அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்கான அறிவிப்பினை தற்போது முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ம் தேதி இதுவரை தமிழகத்தில் 'தமிழ்நாடு நாளாகக்' கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது திமுக அரசு, 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி பேரறிஞர் அண்ணா தீர்மானம் நிறைவேற்றி 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்ததால், ஜூலை 18-ம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் அறிவித்திருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இது தொடர்பாகத் தமிழக அரசை வலியுறுத்தி வந்த நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் நாள், இந்தியா முழுவதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில், அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா,கேரளாவில் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 முதல் நவம்பர் 1-ஆம் நாளை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்தது.

முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பல தரப்பினரும் நவம்பர் 1-ஆம் நாள் போராட்டத்தினை நினைவுகூரும் நாளாகத் தான் அமையுமே தவிர, தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் எனக் கொண்டாடப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளைக் கவனமாகப் பரிசீலித்து, தாய் தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ஆம் நாள் 'தமிழ்நாடு நாளாக' இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும். எல்லை போராட்ட தியாகிகளைச் சிறப்பிக்கும் வகையில், நவம்பர் 1-ஆம் நாள் எல்லை போராட்ட தியாகிகளைக் கௌரவிக்கும் வகையில் 1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்கும் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்ற தியாகிகளைத் தமிழ்நாடு அரசு போற்றி சிறப்பித்து வருகிறது.

தற்போது எல்லை காவலர்கள் சுமார் மொத்தம் 110 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு உதவித்தொகையாக ரூ5,500 மருத்துவச் செலவுக்கு ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் எல்லை காவலர்களின் மரபுரிமையர்கள் 137 பேருக்கு உதவித் தொகையாக ரூ.3,000, மருத்துவச் செலவுக்கு ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது. எல்லை போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறை சென்று தியாகம் செய்து, தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லை காவலர்கள் 110 பேருக்குச் சிறப்பு நேர்வாக வரும் நவம்பர் 1-ஆம் நாள் தலா 1 லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அறிக்கை

திராவிடக் கழகத் தலைவர் கீ.வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் ஜூலை 18-ம் தேதியைத் தமிழ்நாடு நாடாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்திவந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.



from Latest News https://ift.tt/3BnYZaR

Post a Comment

0 Comments