https://gumlet.assettype.com/vikatan/2021-10/185b1b2d-ab89-46b5-8210-54555f080428/vikatan_2019_10_5223475a_f012_4925_9d55_9f3a1da4107e_statue_3960849_1280.jpgசிதறிக்கிடந்த இந்தியாவை ஒருங்கிணைத்த இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் படேல் பிறந்ததினப் பகிர்வு!

சுதந்தர இந்தியா, பல மாகாணங்களாகவும், சமஸ்தானங்களாகவும், சிறு சிறு துண்டுகளாகப் பிரிந்து கிடந்தது. மொத்த இந்தியாவும் கிட்டத்தட்ட 550-க்கும் அதிகமான ராஜ்ஜியங்களாகச் சிதறிக் கிடந்தன. இப்படி தனித்தனியாகப் பிரிந்திருந்த ராஜ்ஜியங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த இந்தியாவாக உருவாக்கியவர் அவர். குஜராத்தின் சர்தார் சரோவர் அணைக்கு அருகில், 597 அடியில் உலகின் உயரமான சிலையாக நிற்கும் சர்தார் வல்லபாய் படேல்தான் சிதறிக்கிடந்த இந்தியாவை ஒன்றிணைந்த பெருமைக்கு உரிய நபர். அவரின் பிறந்த தினம் இன்று.

சர்தார் வல்லபாய் படேல் சிலை

வாழ்க்கை வரலாறு:

வல்லபாய் படேல், குஜராத் மாநிலத்தில் உள்ள கரம்சாத் ஊரில், ஜாவர்பாய் படேல் - லட்பாய் தம்பதியினருக்கு 1875-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் நாள் மூன்றாவது மகனாகப் பிறந்தார். படேலுக்கு, சோமாபாய், நர்சிபாய், விதால்பாய் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற தம்பியும் தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்களாவர். படேல் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தனது 16-வது வயதில் ஜாவெர்பென் படேல் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு மனிபன் படேல் என்ற பெண் குழந்தையும், தாயாபாய் படேல் என்ற ஆண் குழந்தையும் பிறந்தனர்.

படேல் தனது இளம் வயது முதலே வழக்கறிஞர் ஆகவேண்டும் என்ற ஆசையைக் கொண்டிருந்தார். தனது 22-ம் வயதில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, 25-ம் வயதில் டிஸ்ட்ரிக்ட் பிளீடர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் 1900-ம் ஆண்டு கோத்ராவில் அலுவலகம் தொடங்கி வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த படேலின் மனைவி ஜாவெர்பென் படேல் 1908-ம் ஆண்டு காலமானார். தன் மனைவி மீது அதீத அன்பு கொண்டிருந்த படேல் அதன்பின் வேறு திருமணம் செய்துகொள்ளவில்லை. பட்டம் படிக்க 1910-ம் ஆண்டு லண்டன் சென்ற அவர், படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சிபெற்றார்.

சர்தார் வல்லபாய் படேல்

காந்தியுடன் நட்பு:

லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய படேல், அகமதாபாத்தில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். அங்கு வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில், அங்குள்ள மக்களின் பிரச்னைகளுக்காகப் போராடினார். அது சுதேசி இயக்கம் உச்சத்திலிருந்த காலகட்டம். ஒருமுறை மகாத்மா காந்தியின் உரையைக் கேட்ட படேல், குஜராத் வழக்கறிஞர் சங்கத்திலிருந்து வெளியேறினார். வெள்ளடை உடுத்திக்கொண்டு தன்னை சுதேசி இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அதன்பிறகு, பல்வேறு மக்கள் போராட்டங்களுக்காக அடிக்கடி சிறைக்குச் சென்று வந்தார் படேல்.

முக்கியமாகக் காந்தி நடத்தும் போராட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வார் படேல். இரண்டாம் வட்ட மேசை மாநாடு தோல்வியைத் தழுவியது. காந்தி, படேல் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். அப்போது எரவாடா மத்தியச் சிறையிலிருந்த சமயத்தில்தான், படேல் காந்தியுடன் மிகவும் நெருக்கமானார். படேலின் திறமையையும், செயலாற்றலையும் பாராட்டும் விதமாக `சர்தார்' என்ற பட்டத்தை படேலுக்கு வழங்கியவர் காந்திதான். படேல் இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

நேரு, காந்தி, படேல்

துணைப் பிரதமர்:

இந்தியா விடுதலை அடைந்த பின்னர், இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக வல்லபாய் படேலும் பொறுப்பேற்றனர். இதன் மூலம், இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார் படேல். அதுமட்டுமின்றி, முதல் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த சமயத்தில் நாடு முழுவதும் ஒரு பெரும் பிரச்னை நிலவியது. அது `இந்தியாவில் உள்ள சமஸ்தானங்கள் சிதறிக் கிடந்தன. அந்தந்த ராஜ்யத்தின் அரசர்கள், தங்களின் நாடு தங்களுக்கு வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் தொடங்கினார்கள்'.

பல பகுதிகளாகச் சிதறிக்கிடந்த இந்தியாவை ஒன்றாகக் கட்டி எழுப்பும் பொறுப்பு படேலிடம்தான் கொடுக்கப்பட்டது. அதற்குக் காரணம் அவர் அன்றைய உள்துறை அமைச்சராக இருந்தது மட்டுமல்ல, படேலின் செயலாற்றலும்தான். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்தார், பலரைச் சந்தித்தார், பல கட்ட முயற்சிகளைச் செய்தார், பேச்சுவார்த்தைகளை நடத்தினார் படேல். தனக்குத் தரப்பட்ட பணியை யாருமே எதிர்பார்த்திடாத வண்ணம் செவ்வனே செய்து முடித்தார். இன்று ஒருங்கிணைந்து காணப்படும் நம் இந்திய நாட்டைக் கட்டி எழுப்பியதில் பட்டேலின் பங்கு அளப்பரியது.

கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி, படேலின் 143-வது பிறந்த தினம். அன்று, குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா மாவட்டம், கெவாடியா அருகே உள்ள சர்தார் சரோவர் அணை அருகே, 3,000 கோடி ரூபாய் செலவில், படேலின் 597 அடி உயரச் சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதுவே உலகின் மிக உயரமான சிலையாகும். இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue of Unity) என்று அழைக்கப்படுகிறது.

படேல் 1950-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள பிர்லா இல்லத்தில் காலமானார். அப்போது அவருக்கு வயது 75. பட்டேலின் மறைவையடுத்து நாடுமுழுவதும் ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்பட்டது. சிவில் சர்விஸ் பணிகளை (IAS,IPS,IFS) உருவாக்கியதில் படேலுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. படேலுக்கு 1991-ம் ஆண்டு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசால், படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ம் தேதி ``தேசிய ஒற்றுமை தினமாகக்" கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Also Read: 100 கோடியில் பெரியார் சிலை; படேல் சிலையை எதிர்த்தவர்கள் இப்போது என்ன சொல்கிறார்கள்?!

``படேல் இந்தியத் தேசியவாதத்தின் இந்து முகத்தையும், நேரு இந்தியாவை மதச்சார்பற்ற மற்றும் உலகளாவிய முகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தினர். யதார்த்தவாதியான படேல் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும். தொலைநோக்கு பார்வையாளரான நேரு பிரதமராகவும், வெளியுறவு அமைச்சராகவும் இருந்தார்கள். அவர்களின் கூட்டாண்மை நாட்டுக்கு அவசியமானது மற்றும் பலனளிக்கிறது" இது, காந்தியின் பேரனும், வரலாற்றாசிரியருமான ராஜ் மோகன் காந்தி கூறிய வார்த்தைகள்.

பிரதமர் மோடி

தற்போதைய அரசியல் நிகழ்வுகள் எதுவாக இருப்பினும், சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் சர்தார் வல்லபாய் படேல் ஆற்றிய பணிகள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்குப் பேசப்பட்டுக்கொண்டே தான் இருக்கும். காரணம் அவர் காந்தி கனவு கண்ட இந்தியாவைக் கட்டி எழுப்பத் தன் இறுதி நாள்வரை உழைத்த `இந்தியாவின் இரும்பு மனிதர்'.



from Latest News https://ift.tt/3jOsV9R

Post a Comment

0 Comments