https://gumlet.vikatan.com/vikatan/2022-04/6f312c3f-aea6-4c98-b16a-26254727ff67/FL32HwPXwAcDa1K.jpgசீக்கியர்களை ஈர்க்க முனையும் மோடி! - பாஜக வியூகத்தின் பின்னணி என்ன?!

சீக்கிய மத குருவான குரு தேஜ் பகதூரின் 400-வது பிறந்தநாள் விழா டெல்லியிலுள்ள செங்கோட்டையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, குரு தேஜ் பகதூரின் சிறப்புத் தபால் தலை, சிறப்பு ரூ.400 நாணயம் ஆகியவற்றை வெளியிட்டார். அதன் பின்னர், குரு தேஜ் பகதூர் குறித்து சிறப்புரையும் ஆற்றினார் மோடி. பொதுவாகச் சுதந்திர தினத்தன்று மட்டுமே செங்கோட்டையிலிருந்து பிரதமர்கள் பேசுவது வழக்கம். ஆனால், குரு தேஜ் பகதூரின் 400-வது பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மோடி செங்கோட்டையிலிருந்து சிறப்புரையை ஆற்றியிருக்கிறார். சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர், டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய முதல் பிரதமர் மோடிதான். இந்த நிகழ்வை வரலாற்றில் இடம்பெறச் செய்வதற்காகவும், சீக்கியர்களின் அபிமானத்தை பெறுவதற்காகவும்தான் மத்திய பா.ஜ.க அரசு செங்கோட்டையில் இந்த விழாவை நடத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், `சீக்கியர்களின் வாக்கு வங்கியைக் குறி வைத்துத்தான் மோடி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்' என்ற பேச்சுகள் எழத் தொடங்கியிருக்கின்றன.

சீக்கியர்களுடன் மோடி

சீக்கிய மதத்தினரோடு சந்திப்பு!

சீக்கிய மதம் சார்ந்த விஷயங்களில் மோடி அக்கறை காட்டுவது இது முதல் முறையல்ல. கடந்த மாதம்கூட சீக்கிய மதத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார் மோடி. பிரதமர் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு, 90 நிமிடங்கள் நீடித்தது. இந்தச் சந்திப்பு முடிந்த பின்னர் பேசிய பா.ஜ.க நிர்வாகி மன்ஜிந்தர் சிங் சிர்சா, ``சீக்கிய மதம் சார்ந்த நிகழ்வுகளில் தான் கலந்துகொண்டதைப் பெருமையாகக் கருதுவதாகப் பிரதமர் மோடி கூறினார். மேலும், சீக்கிய மதம் சார்ந்த எந்தப் பிரச்னை என்றாலும், தன்னை அணுகலாம் என்று அவர் உறுதியளித்திருக்கிறார்'' என்றார்.

வீர் பால் திவாஸ்... வேளாண் சட்டங்கள் ரத்து!

சீக்கிய மத குருக்களில் ஒருவரான குரு கோவிந்த் சிங்கின் மகன் ஷாகிப்சேட்ஸின் (Sahibzades) நினைவு தினமான டிசம்பர் 26-ம் தேதி, `வீர் பால் திவாஸ்' ஆகக் நினைவுகூரப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்தார் மோடி. சீக்கிய மத குருவான குருநானக் தேவ்வின் பிறந்த தினத்தன்றுதான் மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார் மோடி. இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக அதிக அளவில் போராடிய சீக்கியர்களை, ஓரளவுக்குச் சமாதானப்படுத்தவே அன்றைய தினத்தில் இந்த அறிவிப்பை மோடி வெளியிட்டதாக நம்பப்படுகிறது.

விவசாயிகள் போராட்டம் சீக்கியர்கள்

ஆப்கனிலிருந்து வெளியேற்றப்பட்ட சீக்கிய குடும்பங்கள்!

கொரோனா உச்சத்திலிருந்த சமயத்தில், ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது தாலிபன் படை. இதையடுத்து அங்கிருக்கும் இந்தியாவைச் சேர்ந்த இந்துக் குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் இறங்கியது மத்திய பா.ஜ.க அரசு. இந்துக் குடும்பங்களை மட்டுமல்லாமல் சீக்கிய குடும்பங்களை வெளியேற்றுவதிலும் அதிக கவனம் செலுத்தியது மத்திய அரசு.

பஞ்சாபி மொழியில் ட்வீட்!

சீக்கிய மத குருமார்கள் பற்றி அடிக்கடி ட்வீட் செய்யும் பிரதமர் மோடி, அதில் சில ட்வீட்களை பஞ்சாபி மொழியிலேயே பதிவு செய்திருந்தார். மேலும், பல சந்தர்ப்பங்களில் குருத்வாராக்களுக்குச் சென்று வழிபாடுகளையும் செய்திருக்கிறார் அவர்.

மோடி, ஜே.பி நட்டா, அமித் ஷா

பா.ஜ.க-வின் திட்டம் என்ன?

இது குறித்து தேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், ``கடந்த சில ஆண்டுகளாகவே சீக்கிய மதம் சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறார் பிரதமர் மோடி. பொதுவாகவே பா.ஜ.க இந்துக்களுக்கான கட்சி என்றும், சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான கட்சி என்றும் எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்துவருகின்றன. இந்த விமர்சனங்களைச் சரி செய்ய, பல விஷயங்களில் இந்து மதத்துடன் ஒத்துப்போகும் சிறுபான்மை மதமான சீக்கிய மதத்தின் மேல் அதிக அக்கறை காட்டிவருகிறது பா.ஜ.க என்றே தோன்றுகிறது. அதை மனதில் வைத்துத்தான் பிரதமரும் சீக்கிய மதத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார் எனத் தெரிகிறது.

மேலும், கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் தேர்தலில், 73 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது பா.ஜ.க. முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் கட்சியுடன் கூட்டணி அமைத்துமே இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி கிட்டியது. பஞ்சாப்பில் அதிகம் வாழும் சீக்கியர்களைக் கவர்ந்தால் மட்டுமே, அங்கு பா.ஜ.க வளர்ச்சி அடைய முடியும். எனவே, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஓரளவுக்காவது சீக்கியர்களின் ஆதரவைப் பெற வேண்டுமென்ற முனைப்பில் பா.ஜ.க இருப்பதாகத் தெரிகிறது'' என்கிறார்கள்.



from Latest News https://ift.tt/mL1JMED

Post a Comment

0 Comments