https://gumlet.vikatan.com/vikatan/2022-05/aa7fdc76-0f7e-4112-b431-8b7e3676c76f/sidhu_moosewala_16538305113x2.webpகேங் வார்; கனடா டீம் - பாதுகாப்பை திரும்ப பெற்ற மறுநாள்... பஞ்சாப் பாடகர் கொலையில் நடந்தது என்ன?

பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக ஆம் ஆத்மி கட்சி பதவியேற்ற பின்னர், கடந்த காலத்தில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை அரசு திரும்ப பெற்றுக்கொண்டது. ஏற்கனவே பஞ்சாப்பில் கடுமையான கேங்-வார் நடந்து கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தின் மான்சா மாவட்டத்தில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், பாடகருமான சித்து மூஸ் வாலாவை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். மூஸ் வாலா தனது நண்பர்கள் இரண்டு பேருடன் காரில் ஒரு கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தார். அந்நேரம் அவர்களின் காருக்கு நேர் எதிரில் இரண்டு கார்களில் வந்த மர்ம கும்பல் மூஸ் வாலா மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டது. இருக்கையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மூசா வாலா உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதற்குள் அவர் இறந்து போயிருந்தார்.

சித்து மூஸ் வாலா

அவருடன் இருந்த இரண்டு பேர் காயம் அடைந்தனர். மூஸ் வாலாவுக்கு பஞ்சாப் அரசு பாதுகாப்பை திரும்ப பெற்றுக்கொண்ட அடுத்த நாள் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேங்க் வார் காரணமாகவே இந்த படுகொலை நடந்திருப்பதாக பஞ்சாப் டிஜிபி பவுரா தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டை லாரன்ஸ் பிஸ்னோய் கூட்டத்தினர் நடத்தி இருப்பதாகவும், அக்கூட்டத்தில் கனடாவை சேர்ந்த லக்கி என்பவர் துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பு ஏற்று இருப்பதாகவும் தெரிவித்தார். மூஸ் வாலாவுக்கு இரண்டு கமாண்டோ பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டு இருந்ததாகவும், அவர்களை மூஸ் வாலா அழைத்து செல்லவில்லை என்றும், குண்டு துளைக்காத கார் மூஸ் வாலாவிடம் இருப்பதாகவும் அதையும் வெளியில் சென்ற போது எடுத்து செல்லவில்லை என்று பவுரா தெரிவித்தார். இக்கொலை குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு ஒன்றையும் போலீஸார் அமைத்துள்ளனர். இக்காரியத்தில் ஈடுபட்ட யாரையும் விட்டு வைக்கமாட்டோம் என்றும், பொதுமக்கள் அமைதி காக்கவேண்டும் என்றும் மாநில முதல்வர் பகவந்த் மான் கேட்டுக்கொண்டுள்ளார். இப்படுகொலை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.

சுப்தீப் சிங் சித்து என்ற பெயரை கொண்டவர், சித்து மூஸ் வாலா என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். மூஸ் வாலா என்பது அவரின் ஊர் பெயர் ஆகும். மிகவும் புகழ் பெற்ற பாடல்களை பாடியிருக்கும் சித்து மூஸ் வாலா துப்பாக்கி கலாசாரத்தை ஊக்குவிக்கும் விதமாக பாடல்களை பாடுவதாக விமர்சனம் எழுவதுண்டு. கொரோனா காலத்தில் துப்பாக்கியால் சுட்டதாக அவர் மீது ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு பாடல்கள் மூலம் வன்முறையை தூண்டுவதாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடதக்கது.



from Latest News https://ift.tt/Ygit7wy

Post a Comment

0 Comments