https://gumlet.vikatan.com/vikatan/2022-04/e1f7c506-27e6-4f85-882c-2eb5198f8c07/1650771860475.jpgபுதுச்சேரி: ``பேனர் வைத்தவர்களே அதனை அகற்றிவிட்டார்கள்!” – மாவட்ட ஆட்சியர் விளக்கம்

புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் இருக்கிறது. பொது இடங்களில் பேனர் வைக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் நிலை ஆணையும் இருக்கிறது. ஆனால் அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் அதனை கண்டுகொள்ளாமல் சாலைகளை அடைத்து பேனர்களை வைப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதனை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும், நகராட்சியும் விழா தேதி முடியும் வரை அமைதியாக இருந்துவிட்டு, பேனர்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. அப்படியும் அகற்றாத பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். சமீபத்தில் அமித் ஷா வருகைக்காக வைக்கப்பட்ட பேனர்களை நகராட்சியை அகற்றும்படி உத்தரவிட்ட நீதிமன்றம், அதற்கான தொகையை பேனர் வைத்தவர்களிடமே வசூலிக்கும்படி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக பேனர்கள்

இந்நிலையில் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன், ``இந்திய சுதந்திர தினத்தின் 75-வது அமிர்த ஆண்டு பெருவிழாவின் ஒரு பகுதியாக, பிரதமர் நரந்திர மோடி அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட 14 திட்டங்களின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளோடு வரும் 31-ம் தேதி காணொளி வாயிலாக கலந்துரையாட உள்ளார். பிரதமரின் வீடு கட்டும் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், ஆயூஷ்மான் பாரத் திட்டம், அம்ரூத் திட்டம், ஒரே நாடு, ஒரு ரேஷன் அட்டை திட்டம், முத்ரா திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பயன்பெற்ற 20 பயனாளிகளோடு கலந்துரையாடுகிறார்.

இந்த திட்டங்கள் மூலம் அவர்கள் பெற்ற பலன், திட்டங்களை மேலும் திறம்பட அமல்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், 100 சதவிகிதம் இந்த திட்டத்தின் பயன்கள் மக்களுக்கு செல்வதை உறுதி செய்வதற்காக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை பயனாளிகளிடம் கேட்கவே இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன்

புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் காலை 9 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சியில் ஆளுநர், முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், எம்.பிக்கள் மற்றும் பொதுநல இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதேபோல் காரைக்கால் மாவட்டத்திலும் நடக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 600 பயனாளிகளும், காரைக்காலில் 400 பயனாளிகளும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் பயனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி துறை, உள்ளாட்சி துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. ஆகவே இந்த நிகழ்ச்சியில் பயனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். புதுச்சேரியில் பேனர் வைக்கக்கூடாது என சொல்லியுள்ளோம். வைத்தவர்கள் மீது வழக்கும் பதிவு செய்துள்ளோம்.

90 சதவிகிதம் பேனர்களை அதனை வைத்தவர்களே அகற்றியுள்ளனர். அகற்றப்படாமல் இருந்த பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனையும் மீறி ஒரு சில இடங்களில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதனையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நிரந்தரமாக பேனர்களை அகற்றுவதற்கு எனது தலைமையில் எல்லா துறைகளையும் சேர்ந்த பிரத்தேயகமாக குழு ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த குழு அடுத்த வாரத்தில் இருந்து செயல்பட தொடங்கும்” என்றார்.



from Latest News https://ift.tt/txN5j9Q

Post a Comment

0 Comments