https://gumlet.vikatan.com/vikatan/2022-06/950a9b21-727f-484c-a9ad-af04a9a35bab/WhatsApp_Image_2022_06_27_at_10_09_32_AM.jpegஒற்றைத் தலைமை: `அதிமுக சட்டத்துக்கு புறம்பானது’ - தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை சர்ச்சை மிகப் பெரிய அளவில் வெடித்திருக்கிறது. நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தாலும், கட்சி விதிகள், நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பன்னீர்செல்வம் எடப்பாடி தரப்புக்கு கடும் போட்டி அளித்து வருகிறது. ஓ.பன்னீர் செல்வத்தின் ஒப்புதல் இல்லாமலேயே அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று(27-06-2022) நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ஜூலை மாதம் 11-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் நடைபெறும் என கூறப்படும் பொதுக்குழு தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது சொல்லப்பட்டது.

அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி

அதிமுக-வில் தொடர்ந்து நிலவி வரும் தலைமை சர்ச்சைகளுக்கு மத்தியில் தொண்டர்களை சந்திப்பதற்காக சொந்த ஊரான தேனிக்கு புறப்பட்ட சென்றார் ஓ.பன்னீர்செல்வம். எனினும் அதிமுக தலைமை அலுவலகத்தில் அவசரக் கூட்டம் எடப்பாடி தரப்பினரால் கூட்டப்பட்ட காரணத்தினால் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.

ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை சென்னை திரும்பிய நிலையில் அவரின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகளுடனும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுடனும் இணைந்து ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி தரப்பினரால் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள பொது குழுவுக்கு தடை வாங்குவது தொடர்பாக நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பன்னீர்செல்வம்

இதனிடையே ஓ. பன்னீர்செல்வம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு ஆதாரங்களுடன் மிக நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் பல்வேறு விவகாரங்களை அதிமுக-வின் சட்ட விதிகளின்படி குறிப்பிட்டிருக்கிறார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்....

``2017 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி அதிமுக-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டது. இந்த இரண்டு பதவிகளும் பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று விதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இந்த இரு பதவிகளுக்கும் பதவிக்காலம் 5 ஆண்டுகள் எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த சட்டத் திருத்தம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு முறையாக தெரிவிக்கப்பட்டது. அதுமுதல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தங்கள் கடமைகளை ஆற்றி வந்தோம், வருகிறோம்.

இந்த புதிய சட்டத் திருத்த விதி கொண்டுவரப்பட்ட பின்பு இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம் நடத்திய பல்வேறு தேர்தல்களை எங்கள் கட்சி சந்தித்து இருக்கிறது. இந்த நிலையில் அதிமுக பொதுக் குழுக் கூட்டமானது கடந்த 23-ம் தேதி அன்று நடத்தப்படும் என ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களால் அறிவிக்கப்பட்டது. இதன்பின்னர் கட்சிக்கு ஒற்றைத் தலைமை குறித்து சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து 23-ம் தேதி அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.

அவை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டிருந்தது. எனினும் 23-ம் தேதி அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், அந்த 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக அறிவித்தார். பொதுக்குழுவில் எந்த ஒரு விவாதமும் மேற்கொள்ளாமல் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த நிர்வாகிகளுக்கும் ஒப்புதல் அளிக்காமலேயே கூட்டம் முடிவுக்கு வந்தது. அதிமுக வரலாற்றில் முதல்முறையாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு

இதனை தொடர்ந்து புதிய அவைத்தலைவர் தேர்வு நடத்தப்பட்டது. மேலும் ஜூலை மாதம் 11-ம் தேதி புதிய பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனவும் அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சட்டத்திற்கு புறம்பான ஒன்று. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அந்த கூட்டத்தில் இருந்த போதும், இது தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர், `இந்தக் கூட்டம் சட்டவிரோதமானது, அவைத்தலைவர் தேர்வு, அடுத்த பொதுக்குழு கூட்ட அறிவிப்பு அனைத்துமே சட்ட விதிகளுக்குப் புறம்பானது’ என தெரிவித்துவிட்டு அக்கூட்டத்தில் இருந்து வெளியேறினோம்.

பொதுக்குழு கூட்டத்தில் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது. உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்திருந்த போதிலும் வெளியாட்கள் பலர் சட்டத்துக்கு புறம்பாக அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்தக் கூட்டத்தில் என் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டன. கூட்டம் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

அதிமுக பொதுக்குழு

இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் தான் 27-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெறும் என ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் முறையான கையெழுத்து இன்றி தலைமை நிலைய செயலாளர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என யாருடைய கையெழுத்தும் இல்லை.

கட்சி விதிகளின்படி தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் அழைப்பு விடுக்க முடியாது. அதிமுக சட்ட விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் மட்டுமே இதுபோன்ற ஒரு கூட்டு அறிவிப்பை வெளியிட்டு கூட்டத்தை நடத்த முடியும். அப்படி ஒரு அறிவிப்பு வெளியிடாமல் 27-ம் தேதி அன்று நடைபெற்ற கூட்டம் சட்டத்திற்கு புறம்பானது.

அக்கூட்டத்தில் ஜூலை 11-ம் தேதி அன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என முடிவு எடுத்திருப்பது சட்ட விதிகளுக்குப் புறம்பானது. மேலும் அதிமுக பொருளாளர் என்கிற அடிப்படையில் கட்சியின் வரவு செலவு கணக்குகளை கடந்த பொதுக்குழு கூட்டத்தில் தாக்கல் செய்ய என்னை அனுமதிக்கவில்லை. 14-6-2002 முதல் தற்போது வரை அதிமுகவில் நடந்த சட்ட விதி மீறல் சம்பவங்களை தேர்தல் ஆணையத்தின் முன் சமர்ப்பிக்கிறேன்” எனக் கூறியுள்ள ஓ.பன்னீர்செல்வம், இது தொடர்பாக ஐந்து ஆதாரங்களையும் இணைத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதில், சென்னை உயர்நீதிமன்றம் 23-ம் தேதி அதிகாலை 4:45 மணிக்கு வழங்கிய உத்தரவையும், பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட 23 தீர்மானங்களையும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களும், 27-ம் தேதி கூட்டத்திற்கான அறிவிப்பும், ஓ பன்னீர் செல்வத்தின் அறிக்கை ஆகியவையும் இக்கடிதத்துடன் தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் சார்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



from Latest News https://ift.tt/5Vxp62F

Post a Comment

0 Comments