https://gumlet.vikatan.com/vikatan/2022-07/af06cb27-87b2-4da1-b10d-714b6e88b809/20220730_180801.jpg``காம்ரேட் பினராயி விஜயனுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டமிருக்கிறது!"- நெகிழ்ந்த ஸ்டாலின்

கேரளாவில் மனோரமா நியூஸ் கான்க்ளோவ் 2022 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பேசினார். பின்னர் முதல்வர் ஸ்டாலினிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "எனக்கு கேரளாவில் ரசிகர்கள் இருப்பது போல, கேரள முதல்வர் காம்ரேட் பினராயி விஜயனுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் முதலமைச்சராக செயல்பட்டுக்கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் வேறொரு கட்சி ஆட்சி இருந்தது. அப்போது கேரளா முதல்வர் பினராயியை போல தமிழ்நாட்டுக்கு ஒரு முதலமைச்சர் இல்லையே என்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் ஒரு ஏக்கத்தோடு சொல்லிக்கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் நடந்த சமயத்தில் நான் என்னுடைய செயல்பாடுகளுக்கு முன்னுதாரணமாக உங்கள் முதலமைச்சர் பினராயி விஜயனுடைய செயல்பாடுகளைதான் கையில் எடுத்தேன். பினராயியின் வழிகாட்டுதல்படி பணியை நிறைவேற்றினேன் என்பதுதான் முக்கியம். இதுதான் எனக்கு பெரிய பெருமை.

காணொளி காட்சி மூலம் பேசிய முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் தி.மு.க, சி.பி.எம் கட்சிகளிடையே இருப்பது வெறும் தேர்தல் கூட்டணி மட்டும் அல்ல. அது கொள்கை கூட்டணி, லட்சிய கூட்டணி. எனவே நாங்கள் இணக்கமாகவே இருக்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் தி.மு.க ஆட்சிக்கு தேவையான ஆலோசனைகளை, சி.பி.எம் கட்சி தலைவர்கள் அவ்வப்போது அறிக்கைகளாக கொடுக்கிறார்கள். தொலைபேசி மூலமாகவும், நேரில் வந்தும் கருத்துகளை சொல்கிறார்கள். நானும் சில விஷயங்களை அவர்களை தொடர்புகொண்டு கலந்துபேசிக்கொண்டுதான் செய்கிறேன். அதுமட்டுமல்லாமல் அவர்களின் அதிகாரபூர்வ ஏட்டில் அவ்வப்போது ஆட்சியில் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக்காடுகிறார்கள். அதை உடனுக்குடன் சரி செய்கிறோம். எங்கள் கூட்டணி ஆரோக்கியமாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. இது தொடரும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின்

இந்தியா பல்வேறு மொழிகள் பேசக்கூடியவர்கள் வாழும் நாடு. இங்கு ஒற்றைமொழி தேசிய மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ ஆக முடியாது. அதனால் மற்ற மொழிகள் காலப்போக்கில் அழிந்துவிடும். போராடிபெற்ற சுதந்திரத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு வழங்கிய உரிமைகள் அனைத்தையும் பறிப்பது என்பது மிக மிக தவறானது. அது இந்திய விடுதலை போராட்ட தியாகிகளுக்கு செய்யக்கூடிய துரோகம்" என்றார்.



from Latest News https://ift.tt/oMwcusA

Post a Comment

0 Comments