https://gumlet.vikatan.com/vikatan/2022-07/88206261-561b-4c34-9cb1-b297697f123d/IMG_20220731_091307.jpg``எல்.முருகன் மாதிரி தானும் வர முடியாதா என்று பார்த்துக்கொண்டிருப்பார் அண்ணாமலை!" - பொன்முடி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திலிருக்கும் ஊராட்சி முகமை அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியார்களைச் சந்தித்துப் பேசிய பொன்முடி, ``அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுத்து பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் வரலாறு தெரியாமல் பேசுவதால், நான் ஒரு வரலாற்றுப் பேராசிரியர் என்ற முறையிலே சொல்கிறேன். அவர் பேசும்போது சொல்கிறார், `திராவிடம் என்ற வார்த்தையே 1800-களில்தான் வந்தது' என்று.

விழுப்புரம் - மாவட்ட ஆட்சியரங்க கூட்டரங்கு

அதற்கு டி.ஆர்.பாலு, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பலமுறை பதில் சொல்லியிருக்கிறார்கள். திராவிட மாடல் என்பது... திராவிட இயக்கம் தோன்றுவதற்கு பின்னர் வந்ததல்ல. அது, சிந்து சமவெளி நாகரிகத்தோடு தோன்றிய நாகரிகம் என்று சொல்லியிருக்கிறோம். இதெல்லாம் பலமுறை சொல்லியாகிவிட்டது, அவர்களுக்குப் புரியாத விஷயம் இது. அண்மையில் பிரதமர் முன் பேசும்போது கூட, நான் நிதியுதவியை கேட்கவில்லை. 'தமிழக முதலமைச்சர் கல்வியை உயர்த்துவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும்' என்றுதான் கேட்டேன். அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் அந்த காலத்திலிருந்தே உயர்கல்வி வளர்ந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினேன்.

ஆனால் அதற்கு அண்ணாமலையோ, `எண்ணிக்கை உயர்ந்தால் மட்டும் போதாது. தரம் உயர வேண்டும்' என்று சொல்கிறார். தரத்தை உயர்த்துவதற்காக தான் `நான் முதல்வன் திட்டம்' உள்ளிட்டவற்றை செயல்படுத்தியுள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். அக்காலத்திலே அடித்தட்டு மக்கள் படிக்க முடிந்ததா? தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை மாணவர்களை கல்வி நிலையத்தின் உள்ளே நுழைய விட்டார்களா? படிப்பதற்கே வாய்ப்பு இல்லாமல் இருந்தது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே படிக்க முடியும் என்றிருந்த காலம். அதை எல்லாவற்றையும் மாற்றியமைத்து, அடித்தட்டு மக்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் சமமாக படிக்கவேண்டும் என்ற கொள்கை கொண்டதுதான் திராவிட மாடல் ஆட்சி. அதைத்தான் தளபதியும் அடிக்கடி சொல்வார். சமத்துவமும், சமூக நீதியும்தான் திராவிட மாடல் ஆட்சிக்கு அடிப்படை.

அண்ணாமலை - நரேந்திர மோடி

பிரதமரும் நான் சொன்னதை அன்பாக எடுத்துக்கொண்டார். ஆனால், அண்ணாமலைக்கு என்ன ஆனதோ தெரியவில்லை... நான் என்னவோ நிதியுதவி கேட்டதாகவும், மத்திய அரசு 6,664 கோடி ரூபாயை நான்கு வருடங்களில் கொடுத்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்" என்று கூறிவிட்டு புன்னகைத்தவர், ``தமிழக அரசு உயர் கல்விக்காக ஓர் ஆண்டில் செலவிட்ட தொகை 5,665 கோடி ரூபாய். அந்த அளவிற்கு தமிழக அரசு கல்விக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மொழிக் கொள்கை அடிப்படையில் எங்களை சுதந்திரமாக விடுங்கள் என்றுதான் சொல்கிறோமே தவிர, நிதியுதவியை கேட்கவில்லை. அவரும் இவற்றை புரிந்துக்கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே அதிக அளவில், அதாவது 53% பேர் தமிழகத்தில்தான் உயர்கல்வி படிக்கிறார்கள். அதுவும், திராவிட மாடல் ஆட்சிக்கு பிறகு.. அண்ணா காலத்திற்கு பிறகுதான் நடைபெற்றது. அதை தான் நான் எடுத்துச் சொன்னேனே தவிர, வேறு யாரையும் குறைசொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்கூட சொல்லவில்லை.

ஆனால், அதனை அண்ணாமலை அவர்கள் இந்த அளவிற்கு கொச்சைப்படுத்துவார் என்று நான் நினைக்கவில்லை. என்ன பண்ணுவது... அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான். அடுத்து முருகன் மாதிரி தானும் வர முடியாதா என்று பார்த்துக் கொண்டிருப்பார்" என்றார்.



from Latest News https://ift.tt/pQnP9ds

Post a Comment

0 Comments