https://gumlet.vikatan.com/vikatan/2022-12/0ad333ee-ee7c-4eaa-a196-c6c1b6dd2a33/1672205849071.jpg``பாஜக-வுடன் திமுக ரகசிய தொடர்பு வைத்திருக்கிறது!” - புதுச்சேரி அதிமுக சாடல்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி நேற்று பந்த் போராட்டத்தை நடத்தியது அ.தி.மு.க. மாலை பந்த் முடிந்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன், “மத்திய அரசின் கீழ் இருக்கும் புதுச்சேரிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதனால் மாநிலத்தின் வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. முதல்வர் நேரில் சென்று கவர்னரை சந்தித்து கோப்புகளுக்கு கையெழுத்து பெறும் அடிமை நிலை தொடர்கிறது.

புதுச்சேரி மாநில காவல்துறை தி.மு.கவின் ஏவல் துறையாக மாறி, கழக தொண்டர்களை அதிகாலை 5 மணியளவில் கைது செய்தனர். இந்த பந்த் போராட்டத்தை தி.மு.க திட்டமிட்டு சீர்குலைக்கும் வகையில், டி.ஜி.பியை சந்தித்து அ.தி.மு.கவினரை உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வேண்டும் என புகார் அளித்தது. அதனடிப்படையில் காவல்துறை தி.மு.கவின் ஏவல் துறையாக மாறி, எங்களை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். 25 ஆண்டுகால புதுச்சேரி வரலாற்றில் எந்த கட்சிகள் பந்த் நடத்தினாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்த அரசியில் கட்சி தலைவர்களும் கைது செய்யப்படவில்லை.

பந்த் போராட்டத்தால் மூடப்பட்டிருக்கும் கடைகள்

கடந்த காலங்களில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆணையின் பேரில் புதுச்சேரியில் நடைபெற்ற பந்த் போராட்டத்தின் போது, பல்வேறு அசம்பாவித சம்பங்கள் நடைபெற்றுள்ளன. அப்போது அவர்கள் கைது செய்யப்படவில்லை. வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. மாநில அந்தஸ்துக்காக பந்த் நடத்தினோம். இந்த பந்த்தை தி.மு.க ஆதரிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் மாநில அந்தஸ்தை தடுப்பது போல் செயல்பட்டிருப்பது அவர்களின் இரட்டை வேடம் வெளியே வந்திருக்கிறது. அவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.கவுடன் ரகசிய தொடர்பு வைத்திருக்கும் தி.மு.க, அ.தி.மு.கவை அழிக்க நினைக்கிறது. பா.ஜ.கவும் அதற்கு துணை நிற்பதாக தெரிகிறது. மாநில அந்தஸ்து பற்றி பேசவோ, குரல் கொடுக்கவோ தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எந்த அறுகதையும் கிடையாது. பா.ஜ.க ஆதரவு பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவர் வணிகர் கூட்டமைப்பு சார்பில் கடைகள் திறக்கப்படும் என கூறினார். ஆனால் எந்த கடைகளும் திறக்கப்படவில்லை.

வியாபாரிகள் சங்கம் என்ற போர்வையில் வியாபாரிகளை மிரட்டவதை சிவசங்கரன் போன்ற சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் அவரின் பாணியில் அ.தி.மு.க பதிலடி கொடுக்கும். பந்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அனைத்து சமுதாய அமைப்புகளுக்கும், சங்கம் என்ற போர்வையில் பந்துக்கு எதிரான அறிக்கைகளை வெளியிட்டவர்களுக்கும், இந்த பந்த்தை சீர்குலைக்க காவல்துறை டி.ஜி.பி வரை சென்று பந்த்தை முறியடிக்க ஈடுபட்ட தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பந்த் இல்லை என்று விளம்பரப்படுத்தியவர்களுக்கும் நன்றி. அவர்களால்தான் இந்த பந்த் வெற்றி பெற்றிருக்கிறது. உண்மையான மக்களுக்காக உழைக்கும் கழகமாக அ.தி.மு.க உள்ளது என்பது இதன்மூலம் தெரிந்திருக்கும். பந்த்தின் போது சில அசம்பாவிதங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதற்கும் அ.தி.மு.க-வுக்கும் சம்பந்தம் இல்லை. தி.மு.க-வினர் தான் இந்த அசம்பாவித சம்பவங்களை திட்டமிட்டு நிறைவேற்றியிருக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்

தி.மு.க மாநில அந்தஸ்து கேட்பது ஒரு கபடநாடகம், வேஷம். அவர்களை நாங்கள் ஆதரவு கேட்கவில்லை. எதிர்ப்பதற்கு என்ன காரணம். அவர்கள் நடத்திய போராட்டத்தின் போது நாங்கள் இதுபோன்ற தடுத்து நிறுத்தவில்லை. இது அ.தி.மு.கவின் தனிப்பட்ட போராட்டம் இல்லை. மக்களுக்கான போராட்டம். மாநில நலனுக்கான போராட்டம். மத்தியில் பா.ஜ.க இருந்தாலும், காங்கிரஸ் இருந்தாலும் எந்த தேசிய கட்சி ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க அவர்களுக்கு உடன்பாடு இல்லை. கோவா கேட்ட போது ஒன்றரை வருடத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. 8 மாநிலங்களுக்கு 2 ஆண்டுகளுக்குள் மாநில அந்தஸ்து வழங்கினார்கள். அ.தி.மு.கவின் நிலைபாடு தெளிவானது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை” என்றார்.



from Latest News https://ift.tt/YuM7TBq

Post a Comment

0 Comments