107 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு ஆட்சியமைக்க முடியாமல் ஆளுநரிடம் விஜய் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரே ஒரு எம்.எல்.ஏவை மட்டும் வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

கடந்த 3 நாட்களில் மூன்று முறை தவெக தலைவர் விஜய் ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிவிட்டார். இன்னமும் அவரை ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்கவில்லை. தவெகவிடம் 107 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். அதேமாதிரி, காங்கிரஸ் + கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு விஜய்க்கு 116 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது.
விசிகவும் பேசிக்கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் ஆளுநர் இன்னும் ஆட்சியமைக்க அழைக்கவில்லை. இதற்கிடையில்தான் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சிகளும் திரைமறைவில் நடந்துகொண்டிருக்கிறது.
தமிழக அரசியல் களமே பரபரப்பாகியிருக்கும் சூழலில், கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டும் வகையில் டிடிவி தினகரன் தன்னுடைய ஒரு எம்.எல்.ஏவின் ஆதரவுடன் 'எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்' என இரவோடு இரவாக ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

'நடக்குற கலவரத்துல இவங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு...' என நகைச்சுவையாக இருந்தாலும் தவெகவினர் இதை கொஞ்சம் கூர்ந்து கவனித்து வருகின்றனர். திமுக, அதிமுக கூட்டணி என பேசப்படும் நிலையில் ஆளுநரை சந்தித்துவிட்டு வந்திருக்கும் டிடிவி தினகரன்,'தவெக குதிரை பேரம் நடத்துகிறது. அமமுக எம்.எல்.ஏ தவெகவுக்கு ஆதரவு என செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். தவெகவுக்கு அமமுக ஆதரவு என ஆளுநரிடம் போலியாக கடிதம் கொடுத்திருக்கின்றனர். என்னுடைய எம்.எல்.ஏ காமராஜை காணவில்லை. போனிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. நான் முன்பே என் எம்.எல்.ஏவிடம் கையெழுத்து வாங்கி வைத்திருந்தேன். ஜனநாயக விரோதமான செயல்பாடுகள் நடப்பதை தவிர்க்க வேண்டும்.' என விஜய் மீது குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
டிடிவியின் குற்றச்சாட்டை முன்வைத்து விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பதில் ஆளுநர் இன்னமும் காலம் தாழ்த்துவாரோ என வருத்தம் கொண்டிருக்கின்றனர்.
from Vikatan Latest news https://ift.tt/XiZIsey
0 Comments