https://ift.tt/rfTDkzE Vikatan: கோடைக்காலத்தில் கர்ப்பம் கூடாதா, ஐவிஎஃப் சிகிச்சை செய்யக்கூடாது என்பது உண்மையா?

Doctor Vikatan: என்னுடைய தோழிக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லை.  உறவினர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு இப்போதுதான் ஐவிஎஃப் சிகிச்சைக்கு சம்மதம் சொல்லியிருக்கிறாள். இந்நிலையில் கோடைக்காலத்தில் ஐவிஎஃப் சிகிச்சை செய்ய வேண்டாம் என மருத்துவர் ஒருவர் அவளுக்கு அறிவுறுத்தியதாகச் சொல்கிறாள். இது உண்மையா... அதே போல கோடைக்காலத்தில் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடும்படியும், ஆடி மாதத்தில் தம்பதியரைப் பிரித்து வைக்கவும் அதுதான் காரணம் என்றும் காலங்காலமாகச் சொல்லப்படுவது சரியா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பாலியல் சிகிச்சை மருத்துவர் காமராஜ்.

பாலியல் மருத்துவர் காமராஜ்

கோடைக்காலத்தில் பொதுவாக அதிகம் ஐவிஎஃப் செய்ய மாட்டார்கள். அதில் வெற்றிவிகிதம் குறைவு. ஜனவரி, பிப்ரவரி போன்ற குளிர் காலங்களிலேயே நிறைய ஐவிஎஃப் சிகிச்சைகள் நடக்கும். இதுதான் இன்றைய நிலைமை. ஐவிஎஃப் சராசரியாக கடந்த 30 ஆண்டுகளாகத்தான் செய்யப்பட்டு வருகிறது.  புதிய ஆய்வுகள் நடக்கும்பட்சத்தில் என்னவிதமான தரவுகள் எப்படி வரும் என்பதைப்  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கோடைக்காலத்தில் குழந்தை பிறந்தால், அதிக வெயில் காரணமாக தாயும், சேயும் அவதிப்படுவார்களே என்ற கோணத்தில் இதுபோல் ஆடி மாதம் பிரித்து வைத்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு பெரும்பாலான தனியார் நர்ஸிங் ஹோம்களில் ஏசி வசதி உள்ளது. அரசு மருத்துவமனைகளின் பிரசவ வார்டுகளிலும் ஏசி வசதி வந்துவிட்டது. குழந்தைகளை இன்குபேட்டரில் வைக்கிறார்கள். வீடுகளிலும் பரவலாக ஏசி வசதி இருக்கிறது. எனவே, கோடைக்கால வெப்பத்தில் தாயும் சேயும் அந்தளவு அவதிப்படும் சூழல் இன்று இல்லை. அதனால் ஆடி மாதத்தில் தம்பதியரைப் பிரித்து வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

குழந்தையின்மை பரிசோதனைக்குச் செல்லும்போது வைட்டமின் டி 3 சோதனையைக் கண்டிப்பாகச் செய்வார்கள். தாம்பத்திய குறைபாடு கொண்டவர்களுக்கும் வைட்டமின் டி 3 சோதனை செய்வார்கள். கருமுட்டை வளர்ச்சி உள்ளிட்ட பல ஆரோக்கிய நடவடிக்கைகள், நோய்களுக்குப் பின்னால் வைட்டமின் டி முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன் என பல விஷயங்களில் வைட்டமின் டி பாதிப்பு இருக்கிறது. வைட்டமின் டி அளவை சீராக வைத்துக் கொள்வதால் நம் ஆயுளையே அதிகரிக்க முடியும்.

கோடைக்கால வெப்பத்தில் தாயும் சேயும் அந்தளவு அவதிப்படும் சூழல் இன்று இல்லை.

சூரிய ஒளியின் காரணமாக வைட்டமின் டி நன்கு சுரக்கும். அதன் காரணமாக ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனும், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனும் அதிகம் சுரக்கிறது என்று ஆஸ்திரியாவில் நடந்த ஆய்வு ஒன்றில் கண்டறிந்திருக்கிறார்கள். இதனால் அதிக முறை தாம்பத்தியத்தில் ஈடுபடுகிறார்கள், அதிக கர்ப்பம் தரிக்கிறார்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சம்மரில் செரட்டோனின் என்ற மகிழ்ச்சி ஹார்மோன் அதிகம் சுரக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது.  அது தாம்பத்திய உறவுக்கும் உதவும் என்பதுதான் உண்மை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    



from Vikatan Latest news https://ift.tt/WZv2LKn

Post a Comment

0 Comments