Doctor Vikatan: கோடைக்காலத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைத் தவிர்க்க முடிவதில்லை. எனக்கும் என் கணவருக்கும் நீரிழிவு இருக்கிறது. நாங்களும் ஆசைப்பட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விடுகிறோம். நீரிழிவு உள்ளவர்கள் இப்படி எப்போதாவது ஐஸ்க்ரீம் சாப்பிடுவதுகூட ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்குமா.... குழந்தைகளுக்கு அடிக்கடி ஐஸ்க்ரீம் கொடுக்கலாமா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஐஸ்கிரீமில் கொழுப்பும் சர்க்கரையும் அதிகம் என்பதால் நீரிழிவு பாதிப்புள்ளவர்கள், கொலஸ்ட்ரால் பாதிப்புள்ளவர்கள், எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள், இதய நோயாளிகள் தவிர்ப்பதுதான் நல்லது. இப்போது லோ கலோரி ஐஸ்கிரீம்கள், சுகர்ஃப்ரீ ஐஸ்கிரீம்கள் கிடைக்கின்றன. வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சிலர் இவற்றைத் தயாரிக்கிறார்கள். அப்படியிருந்தால் ஆசைக்கு ஒரு ஸ்கூப் சாப்பிடுவதில் தவறில்லை.
'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்' என்பது ஐஸ்க்ரீமுக்கும் பொருந்தும். நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை மூன்றுமாதச் சர்க்கரை அளவு 8-க்கு மேல் இருந்தால் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் சாப்பிடுவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
ஐஸ்க்ரீம் சாப்பிட்ட உடனேயே சிலருக்கு தொண்டை வலியும் தொண்டைக் கரகரப்பும் ஏற்படும். குழந்தைகள் கேட்டு அடம்பிடிக்கும்போது வாங்கித்தர பயப்படுகிறார்கள். வெயில் காலத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டாலும் சிலருக்கு சளி பிடிக்கும்.

சில குழந்தைகள் தினமும் ஐஸ்கிரீம் கேட்டு அடம்பிடிப்பார்கள். அவர்களுக்கு சீசனில் கிடைக்கும் பழங்களை சாறு எடுத்து, ஐஸ்கிரீம் ஸ்டிக் உள்ள டிரேயில் ஊற்றி, ஃப்ரீஸ் செய்து கொடுக்கலாம்.
வெளியில் வாங்கும் குச்சி ஐஸ்களில் நிறைய சர்க்கரை சேர்த்திருப்பார்கள். அதுவே, வீட்டில் மிகக் குறைந்த அளவு சர்க்கரை சேர்த்தோ, சர்க்கரையே இல்லாமலோ செய்யலாம். பழங்கள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளையும் இந்த முறையில் சாப்பிட வைக்கலாம். அடிக்கடி கொடுப்பது சரியானதல்ல.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Vikatan Latest news https://ift.tt/k5acqgS
0 Comments