இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு பெயர்பெற்ற ஊர்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியும் ஒன்று. சுமார் 100 ஆண்டுகளாக இங்கே ஹாக்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால், ’ஹாக்கிபட்டி’ எனவும் கோவில்பட்டியை அழைப்பார்கள். இந்திய ஹாக்கியின் தந்தை ’தயான்சந்த்’ இங்கு வந்து வீரர்களுக்கு பயிற்சி அளித்த சம்பவங்களும் உண்டு. இந்திய அணியில் கோவில்பட்டியைச் சேர்ந்த பல வீரர்கள் விளையாடியுள்ளனர்.
அதனால் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எப்போதும் கிரிக்கெட்டை விட ஹாக்கியே பெரும்பாலான இளைஞர்களால் விளையாடப்பட்டு வருகிறது. இதன்பயனாக, கோவில்பட்டி நகரம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஹாக்கி வீரர்கள் இங்கு வந்து பயிற்சி பெறுகின்றனர். அப்படி அதில் பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவர்தான் கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த மாரீஸ்வரன்.
சமீபத்தில் மத்திய அரசின் ’ஹீலோ’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் தமிழக அணிக்காக இவர் விளையாடினர்.
தமிழக அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் மாரீஸ்வரன் இந்த ஆண்டு இறுதியில் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெறவுள்ள ஜுனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான பயிற்சி முகாமிலும் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
மாரீஸ்வரன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால் இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்று ஹாக்கி பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மாரீஸ்வரனிடம் பேசினேன்.
“ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஹாக்கி விளையாட்டின் மீது எனக்கு விருப்பம் ஏற்பட்டது. முதலில் பொழுதுபோக்கிற்காக விளையாட ஆரம்பித்தேன். நாளடைவில் ஹாக்கி விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பது லட்சியமாகவே மாறி விட்டது. குடும்ப வறுமையால் ஹாக்கி மட்டைகூட வாங்க முடியாத நிலையில் இருந்தேன். சக நண்பர்கள்தான் எனக்கு உதவி செய்தார்கள். இந்திய அணிக்காக ஒலிம்பிக், உலகக் கோப்பைகளில் விளையாடி தமிழகத்திற்குச் சிறப்பிடம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே என் இலக்கு” என்றார்.
from Latest News https://ift.tt/2RTE0Mk
0 Comments