திருவண்ணாமலையில் நடைபெற்ற தி.மு.க வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில், இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, ``இது ஏதோ கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. நம்முடைய எதிரிகள் போடுகின்ற தப்புக் கணக்கை சுக்குநூறாக உடைக்கின்ற கூட்டம், இங்கு வந்து இருக்கின்ற இளைஞரணி கூட்டம்; கொள்கை கூட்டம். பொதுவாக, `இளைஞர்கள் அதிகமாக கூடினால், அவர்களை கட்டுப்படுத்த முடியாது; கட்டுப்பாடு இருக்காது. காட்டாற்று வெள்ளம் மாதிரி போய்கொண்டே இருப்பார்கள். யாருடைய கன்ட்ரோலிலும் இருக்க மாட்டார்கள்' என்கிற பிம்பம், இப்போது வந்திருக்கிறது. ஆனால், நம்முடைய கழக இளைஞரணியினர் அப்படி கிடையாது. மிகுந்த கட்டுப்பாடு மிக்கவர்கள் என்பதற்கு, இங்கு கூடியிருக்கின்ற கூட்டமே உதாரணம். கட்டுப்பாடு இல்லாமல், ஒரு லட்சம் இல்லை, ஒரு கோடி இளைஞர்கள் திரண்டாலும், அதனால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது. அப்படிப்பட்ட கட்டுப்பாடில்லாத கூட்டத்தை வைத்துக்கொண்டு யாராலும், எதையும் சாதிக்க முடியாது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஏதோ, ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும்; பதவியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கட்சி கிடையாது. இது, தமிழ்நாட்டு மக்களை, தமிழினத்தை காப்பாற்றுவதற்காக தொடங்கப்பட்ட இயக்கம். மிசா எனும் நெருப்பாற்றை நீந்தி வந்த இயக்கம். இப்படிப்பட்ட எங்களைப் பார்த்து, குஜராத்தில் உட்கார்ந்துகொண்டு மிரட்டிப் பணிய வைக்கலாம் என்று நினைத்தால், நிச்சயம் அது உங்கள் கனவில்கூட நடக்காது. கடைசி `உடன்பிறப்பு' இருக்கின்ற வரைக்கும் தமிழ்நாட்டை சங்கிக் கூட்டத்தால் தொட்டுகூடப் பார்க்க முடியாது. பீகாரில் வெற்றிபெற்றிருக்கலாம். உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம் என்று வடநாட்டில் வெற்றிபெற்றிருக்கலாம். தமிழ்நாட்டிலும் ஈசியாக நுழைந்துவிடலாம் என்று தப்பு கணக்குப் போடுகிறார்கள். அது நிச்சயம் நடக்காது. ஏனெனில், தமிழ்நாட்டுக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது.
பா.ஜ.க என்பது மதம் பிடித்து ஓடுகின்ற `யானை' என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அந்த யானையை அடக்குகின்ற `அங்குசம்' இங்கு இருக்கின்ற நம் தலைவரின் கைகளில் இருக்கிறது. இது மோடிக்கும் தெரியும். அமித்ஷாவுக்கும் தெரியும். அதனால்தான் நேராக வந்தால் ஜெயிக்க முடியாது என்பதால், பழைய அடிமைகளையும், புதிய அடிமைகளையும் கூட்டிக்கொண்டு, நம்மோடு மோதப் பார்க்கிறார்கள். அதுமட்டுமல்ல, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் என இப்படி எல்லோரிடமும் கூட்டணி வைத்து, பாசிச பா.ஜ.க தமிழ்நாட்டுக்குள் நுழைய பார்க்கிறது. இப்படிப்பட்ட பா.ஜ.க-வை நம்பிதான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் களத்துக்கு வந்திருக்கிறார். ஆனால், நாம் அப்படியில்லை. நாம் தொடர்ந்து மக்களோடு இருக்கிறோம். மக்களும் தொடர்ந்து நம்மோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
கடந்த 4 நாள்களுக்கு முன்பு, சென்னையில் அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூடியது. அதில், `2026-ல் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவோம்' என்று அடிமைகள் ஒரு தீர்மானம் போட்டிருக்கிறார்கள். பொதுவாக, காரில் பேட்டரி டவுன் ஆனால், நான்குபேர் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்யலாம். காரில் என்ஜினே இல்லை என்றால், எவ்வளவு தள்ளினாலும் ஸ்டார்ட் ஆகாது. `என்ஜின் இல்லாத கார்' தான் இங்கு இருக்கக்கூடிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இப்போது, பா.ஜ.க என்ற லாரி, என்ஜின் இல்லாத அந்த காரை எப்படியாவது கட்டியிழுத்துச் செல்ல பார்க்கிறது. `நீதித்துறையை காப்பாற்ற வேண்டும். தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும்' என்று சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. முதலில் அவர் காப்பாற்ற வேண்டியது, பா.ஜ.க-விடம் இருந்து அ.தி.மு.க-வைத்தான். எடப்பாடி பழனிசாமிக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்கிறேன். அடிமையாக இருந்து சுகமாக வாழ்வதைவிட, சுயமரியாதையோடு சுதந்திரமாக வாழ்வது தான் முக்கியம். அதேபோல, யார் வேண்டுமானாலும் இடையில் வரட்டும்; போகட்டும். அதைப்பற்றி நமக்கு கவலை வேண்டாம். வானவில், ரொம்ப அழகாக இருக்கும். கலர் கலராக இருக்கும். அதைப் பார்க்க மக்கள் கூடுவார்கள். ஆனால், அது நிரந்தரம் கிடையாது. உதயசூரியன் மட்டும்தான் நிரந்தரம்" என்றார் உதயநிதி.
from Vikatan Latest news https://ift.tt/rMUoJYj
0 Comments