https://ift.tt/YBSNZ7L Vikatan: அடிக்கடி எக்ஸ்-ரே, ஸ்கேன்... புற்றுநோய் வருமா... எத்தனை முறை எடுக்கலாம்?

Doctor Vikatan: எக்ஸ்-ரே (X-Ray) மற்றும் சிடி ஸ்கேன் (CT Scan) எடுப்பதால் உடம்பில் கதிர்வீச்சுப் பாதிப்பு (Radiation) ஏற்படுமா... இதனால் ஒரு நபருக்கு புற்றுநோய் பாதிக்கும் அபாயம் அதிகரிக்குமா... வருடத்திற்கு எத்தனை முறை எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கலாம்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன்.

 சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன்
சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன்


மருத்துவத்துறையில் எக்ஸ்-ரே (X-ray) மற்றும் சி.டி ஸ்கேன் (CT Scan) ஆகியவை நோய்களைக் கண்டறிவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஆனால், அவை எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை என்ற கேள்வி உங்களைப் போல பலருக்கும் இருக்கிறது. 

எக்ஸ்-ரேயாக இருந்தாலும் அல்லது சி.டி ஸ்கேனாக இருந்தாலும், அவற்றில் அயனியாக்கும் கதிர்வீச்சு (Ionizing Radiation) பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கதிர்வீச்சானது நம் உடலுக்குள் ஊடுருவிச் சென்று, உடலுறுப்புகளின் தெளிவான படங்களை மருத்துவர்களுக்குத் துல்லியமாகக் காட்ட உதவுகிறது.

உண்மை என்னவென்றால், தினந்தோறும் நாம் அனைவரும் ஏதேனும் ஒரு கதிர்வீச்சுக்கு ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறோம். சூரிய ஒளி, மண் மற்றும் விண்வெளியில் இருந்து வரும் கதிர்வீச்சு ஆகியவை 'பேக்ரவுண்டு ரேடியேஷன்' (Background Radiation) எனப்படும்.

இவை இயற்கையாகவே  நாம் எதிர்கொள்பவை. இவை நம்மைச் சுற்றி எப்போதும் இருக்கும்.  சாதாரண மனிதன் இயற்கையாகவே சுமார் 3 மில்லிசீவெர்ட் (Millisivert) அளவிலான கதிர்வீச்சை எதிர்கொள்கிறான்.

ஒரு எக்ஸ்ரே எடுக்கும்போது 0.1 மில்லிசீவெர்ட் (mSv) அளவிலான கதிர்வீச்சு மட்டுமே வெளிப்படுகிறது. இது நாம் இயற்கையாகவே 10 நாள்களில் பெறக்கூடிய கதிர்வீச்சின் அளவிற்குச் சமமானதாகும். எனவே, எக்ஸ்ரே எடுப்பதனால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவானதுதான்.

எக்ஸ்ரே எடுப்பதனால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவானதுதான்.

ஆனால், சிடி ஸ்கேன் என்பது அப்படி இல்லை. பல எக்ஸ்ரே படங்களை ஒன்றிணைத்து, ஒரு முப்பரிமாண (3D) படமாக எடுக்கும் ஒரு தொழில்நுட்பம் (Technology) தான் அது. நாம் மார்புப் பகுதிக்கான சிடி ஸ்கேன் எடுத்தோம் என்றால், அதில் 7 mSv கதிர்வீச்சு இருக்கும். அதாவது, இது 70 சாதாரண எக்ஸ்ரேக்களுக்குச் சமம். அதேபோல, வயிற்றுப் பகுதிக்கான சிடி ஸ்கேன் எடுக்கும்போது 8 mSv அளவிலான கதிர்வீச்சு ஏற்பட்டிருக்கும்.

அடிக்கடி எக்ஸ்-ரே அல்லது ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் (Cancer) வர வாய்ப்புகள் இருக்கிறதா என்ற பயம் எல்லோருக்குமே இருக்கும். உண்மை என்னவென்றால், ஒன்று அல்லது இரண்டு சிடி ஸ்கேன் எடுப்பதால் ஏற்படுகின்ற புற்றுநோய் ஆபத்து என்பது மிக மிகக் குறைவு. 

10 mSv  அளவுள்ள ஒரு சிடி ஸ்கேன் எடுப்பதனால், வாழ்க்கையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு என்பது இரண்டாயிரத்தில் ஒரு பங்கு மட்டுமே அதிகரிக்கும். ஆனால், அடிக்கடி சிடி ஸ்கேன் எடுப்பது கண்டிப்பாக ஆபத்தானதுதான். அவர்களுக்குக் கதிர்வீச்சின் (Radiation) அளவு 50 mSv-ஐத் தாண்டும் போது, பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கண்டிப்பாக அதிகம் தான்.

குழந்தைகளுக்கு எக்ஸ்-ரே அல்லது சி.டி ஸ்கேன் எடுப்பதை மிக அத்தியாவசியமான சூழல்களில் மட்டுமே செய்ய வேண்டும். அதுவும் குறைந்த அளவு கதிர்வீச்சைக் கொண்ட 'லோ டோஸ் சி.டி' (Low Dose CT) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. கர்ப்பிணிகளுக்கு எக்ஸ்-ரே அல்லது சி.டி ஸ்கேன் எடுப்பதைத் தவிர்ப்பது மிகச் சிறந்தது.

ஒரு வருடத்திற்கு இத்தனை முறைதான் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்ற வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் எதுவும் கிடையாது.

இதற்கு நாம் 'As Low As Reasonably Achievable' என்ற கோட்பாட்டையே பின்பற்றுகிறோம். அதாவது, தேவைப்படும்போது மட்டும், உடலுக்குக் கேடு விளைவிக்காத மிகக் குறைந்த அளவிலான கதிர்வீச்சைப் பயன்படுத்தி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.  

மூளையில் பலத்த காயம், மூளைக் கட்டி அல்லது பக்கவாதம் (Stroke) போன்ற தீவிரமான பாதிப்புகள் ஏற்பட்டு, அதன் வீரியம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், சில நேரங்களில் மீண்டும் மீண்டும் ஸ்கேன் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

குழந்தைகளுக்கு எக்ஸ்-ரே அல்லது சி.டி ஸ்கேன் எடுப்பதை மிக அத்தியாவசியமான சூழல்களில் மட்டுமே செய்ய வேண்டும்.

அத்தகைய சூழல்களில், ஸ்கேன் எடுப்பதால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள், கதிர்வீச்சினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைவிட மிக மிக அதிகம். ஸ்கேன் எடுக்காமல் விடுவதால் உயிருக்கே உடனடி ஆபத்து நேரலாம் என்பதால், அந்த ஆபத்தைத் தவிர்க்க நாம் ஸ்கேன் எடுப்பதே சிறந்த முடிவாக இருக்கும். 

சுருக்கமாகச் சொன்னால், எக்ஸ்ரே மற்றும் சி.டி ஸ்கேன் ஆகியவை மருத்துவத்துறையில் கிடைத்த மாபெரும் வரப்பிரசாதங்கள். எனவே, இவற்றைக் கண்டு நாம் பயப்படத் தேவையில்லை. முறையான மருத்துவக் காரணங்களுக்காக, தகுதி வாய்ந்த மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மட்டுமே இவற்றை எடுக்கும்போது இவை முற்றிலும் பாதுகாப்பானவையே.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   



from Vikatan Latest news https://ift.tt/G3F4q5W

Post a Comment

0 Comments