https://gumlet.assettype.com/vikatan/2021-10/8a70eb2a-62e8-401c-a613-fce4241d08f0/IMG_20211030_WA0009.jpg`சில வருட பயிற்சி; முதல் முயற்சியிலேயே வெற்றி!' - IFS தேர்வில் முதலிடம் பிடித்த திவ்யா

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் கீரனூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவரின் மனைவி சந்திராமணி, வருவாய் ஆய்வாளராக உள்ளார். இந்தத் தம்பதிக்கு திவ்யா (23) என்ற மகளும், தேன்முகிழன் என்ற மகனும் உள்ளனர்.

மூத்த மகள் திவ்யா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் முடித்துள்ளார். இவர் முதன்முறையாக எழுதிய, 2020 அக்டோபரில் நடைபெற்ற இந்திய வனப்பணி தேர்வில், இந்திய அளவில் 10-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

திவ்யா (23)

Also Read: ஆசிரியப்பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம்: `எங்கள் நிலை இன்னும் மோசமாகும்!'- வேதனையில் ஆசிரியர்கள்

முதல் முயற்சியிலேயே முதலிடம் பிடித்தது குறித்து திவ்யாவிடம் கேட்டோம். ``சிறுவயதில் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பிறகு, லியோ கிளப் மூலம் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் குறித்து வார நாள்களில் இரண்டு நாள்களும், வார இறுதி நாள்களில் இரண்டு நாள்களும் வகுப்பு எடுப்பார்கள். அதில் பங்கேற்றபோதுதான், ஐ.எஃப்.எஸ் ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதனால் தவறாமல் அந்த வகுப்புகளில் கலந்துகொள்வேன்.

சைதை துரைசாமி சாரின் `மனிதநேய அறக்கட்டளை' பயிற்சி மையத்தில் பயிற்சியளிக்கும் ஆசிரியர்கள்தான் எங்களுக்கும் வகுப்பு எடுத்தார்கள். அது எனக்கு மிகவும் பயனளித்தது. இதையடுத்து 2019-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தவுடன், முழு நேரமாகத் தேர்வுக்குத் தயாரானேன். 2020 பிப்ரவரியில் தேர்வுக்கு விண்ணப்பித்தேன். கொரோனா காலம் என்பதால் தேர்வு தள்ளிப்போனது. இருப்பினும் தேர்வை நன்றாக எழுதினேன். தற்போது இந்திய அளவில் 10-வது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்துள்ளது மகிழ்ச்சியளிக் கிறது.

நான் இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதற்கு என் ஆசிரியர்களும் பெற்றோர்களுமே காரணம். அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கான பணியை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்வேன்.

திவ்யா

Also Read: நன்றி தெரிவிக்க நேரில் சந்திக்க ஆசைப்பட்ட மாணவி; இன்ப அதிர்ச்சி அளித்த ஸ்டாலின்!

பணியில் சேர்ந்தவுடன் வனவிலங்குகளை பாதுகாப்பத்தில் அதிக கவனம் செலுத்த உள்ளேன். வனச்சட்டங்களை முறையாகக் கடைப்பிடித்தாலே வனத்தையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கலாம். எனவே, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவேன்'' என்றார்.

இவரின் சகோதரர் தேன்முகிழன் தற்போது 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் நாசா ஏற்பாடு செய்திருந்த ஓவியப் போட்டியில் பங்கேற்று அவர் வரைந்த ஓவியம், நாசா காலண்டரில் இடம்பெற்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/2ZBHN4T

Post a Comment

0 Comments